OBC இடஒதுக்கீடு.. திமுக வாங்கி கொடுத்த உரிமைக்கு சொந்தம் கொண்டாடுவதா.. பாஜக மீது ஸ்டாலின் அட்டாக்
சென்னை: பா.ஜ.க. அரசுதான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உரிமை தூக்கிக் கொடுத்ததைப் போல சிலர் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடந்த உண்மை எதுவும் தெரியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தேசிய அளவிலான 'சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்' கருத்தரங்கு காணொலி வாயிலாக நடைபெற்றது. IBCF, We The People மற்றும் LEAD INDIA உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இந்த ' கருத்தரங்கம் நடைபெற்றது.
கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை - குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று
இந்தக் கருத்தரங்கிற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மகாராஷ்டிரா மாநில
அமைச்சர் ஷகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆந்திர அமைச்சர் டாக்டர் ஆதிமுலப்பு சுரேஷ், நாடாளுமன்ற எம் பி.க்கள் வில்சன், டெரிக் ஓ பிரையன், மனோஜ் குமார் ஜா, ஈ.டி. முகம்மது பஷீர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
திராவிட இயக்கம் போட்ட விதை
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'வரலாற்று சிறப்புமிக்க நாள் இது! சமூக நீதி வரலாற்றிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள் இந்த நாள். இதனைப் பாராட்டு விழாவாக நான் கருதாமல், அடுத்தக்கட்ட சமூக நீதி உரிமையை பாதுகாக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைக் கூட்டமாகவே நான் இதைக் கருதுகிறேன். திராவிட இயக்கம் போட்ட விதை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் அறுவடையைத் தான் இப்போது நாம் பார்க்கிறோம் என்று கூறினார்.
சமூக நீதி வரலாற்றில் மாபெரும் சாதனை
தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக, சமூக நீதிக்கான வெற்றியை அடைந்துள்ளோம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை அனைத்து இந்திய மருத்துவக் கல்லூரிகளிலும் பெற்றிருப்பதன் மூலமாக, சமூக நீதி வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனை என்பது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. இந்தப் போராட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான பங்களிப்பை செய்துள்ளது என்பதை தலை நிமிர்ந்து சொல்வதை நான் பெருமையாக நினைக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக அரசின் சாதனை
சமூக நீதி என்பது அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக ஆக்கியதும் திமுக தான். இந்த 18 விழுக்காடில் பழங்குடியினரும் இருந்தார்கள். அவர்களுக்கு தனியாக 1 விழுக்காடு வழங்கி, முழுமையாக 18 விழுக்காடும் பட்டியலினத்தவர்களுக்கு கிடைக்க வழி செய்து இன்றைய 69 விழுக்காடை கொண்டுவந்தது திமுக.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்துவர்களையும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் திமுக தான். மிகவும் பிற்படுத்தப்பட்ட 107 சாதியினருக்கு தனியாக 20 விழுக்காடாக பிரித்து, மிகப் பிற்படுத்தப்பட்டோர் எனப் பெயரிட்டு ஒதுக்கீடு வழங்கியது திமுக. அருந்ததியினர்க்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக. இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பிரதமர் வி.பி.சிங் மூலமாக வலியுறுத்தி அதையும் பெற்றோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றியது திமுக என்று கூறி சமூக நீதி கருத்தியலுக்கு செய்த திமுகவின் சாதனைகளை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.
பாஜக கிடையாது; நாங்கதான்
ஏதோ பா.ஜ.க. அரசுதான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உரிமை தூக்கிக் கொடுத்ததைப் போல சிலர் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடந்த உண்மை எதுவும் தெரியாது. 2020-ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டது. 2021-ஆம் ஆண்டு சூலை மாதம்தான் பாஜக. அரசு இதனை ஒப்புக் கொண்டது. இந்த உண்மைகளை அவர்கள் மறக்கலாம். ஆனால் மறைக்க முடியாது. இது ஏதோ ஒரு வழக்கின் வெற்றி அல்ல. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தின் வெற்றி ஆகும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ரத்த பேதம் இல்லை - பால்பேதம் இல்லை
ரத்த பேதம் இல்லை - பால்பேதம் இல்லை என்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் ஆகும். சமூகநீதியும் - பெண்ணுரிமையும்தான் தலையாய லட்சியம் ஆகும். இந்த மகத்தான கொள்கையைத் தமிழத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் தொடங்க இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.