ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய 250 பேர் சிறப்பு ரயிலில் சொந்த ஊர் வருகை.. சென்னைக்கு 133 பேர் பயணம்!
சென்னை: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளனர். 55 பேர் வரை காயமடைந்துள்ளனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகம் நோக்கி 800க்கும் அதிகமானவர்கள் பயணித்த நிலையில் லேசாக காயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சென்னைக்கு சிறப்பு ரயிலில் புறப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் 7 மணிக்கு இந்த ரயில் தடம் புரண்டது. இந்த ரயிலில் என்ஜின் ஏ1, ஏ2 மற்றும் பி2 முதல் பி 9 வரையிலான 8 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் பெட்டிகளில் பயணித்த பொதுமக்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதற்கிடையே தான் அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பெங்களூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 முன்பதிவில்லாத பொது பெட்டிகளும், ஒரு பிரேக் வேன் பெட்டியும் தடம்புரண்டது. அதற்கு பிறகு சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின
இந்த விபத்தில் காலை 10 மணி நிலவரப்படி 280 பேர் வரை பலியாகி உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தோர் உள்பட 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டை சேர்ந்த 55 பேர் படுகாயமடைந்து ஒடிசா மாநிலத்தில் 3 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஒடிசாவின் பாலசூர், ஜட்ஜ்பூர் உள்பட 3 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஒடிசா ரயில் விபத்தில் லேசாக காயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சென்னைக்கு புறப்பட்டு உள்ளனர். ரயில்வே நிர்வாகம் சார்பில் சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் அவர்கள் பயணிக்க தொடங்கி உள்ளனர். இந்த சிறப்பு ரயிலில் மொத்தம் 250 பேர் பயணிக்கின்றனர். இந்த சிறப்பு ரயில் ஒடிசா மாநிலம் பாத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது.

இந்த ரயில் பிரம்மாபூர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா வழியாக நாளை காலை 9 மணிக்கு சென்னை வர உள்ளது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த ரயிலில் தற்போது விசாகப்பட்டினத்தை சேர்ந்த 41 பேர், ராஜமுந்திரியை சேர்ந்த ஒருவர், பிரம்மாபூரை சேர்ந்த 4 பேர் பயணிக்கின்றனர். மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 133 பயணிகள் வர உள்ளனர்.
மேலும் ரயில் விபத்து தொடர்பான விபரங்களை பெற விரும்பும் மக்கள் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த மையங்களை பொதுமக்கள் 044-25330952, 044-25330953 & 044-25354771 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications