ஓமிக்ரான் பரவல்: 4 பேர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வருகை - 3 நாட்கள் ஆய்வு
ஒமிக்ரான் பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய பன்னோக்கு மருத்துவ குழு சென்னை வருகை தந்துள்ளனர். தமிழகத்தில் 3 நாட்கள் வரை ஆய்வு செய்யும் இந்த குழுவினர் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 4 போ் கொண்ட மத்திய மருத்துவ குழுவினா் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தனர். தமிழகத்தில் 3 நாட்கள் வரை ஆய்வு செய்து மத்திய அரசிடம் இந்த குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. தற்போதுவரை 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 450க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமிக்ரான் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 34 பேர் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 12 பேர் குணமடைந்தனர். மேலும் 39 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி தென்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்.
ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உள்ள கேரளா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, ஓமிக்ரான் பாதிப்புகள் குறித்தும், பரவல் குறித்தும் ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ குழு வல்லுநர்கள் டாக்டர் வனிதா,புர்பசா,சந்தோஷ் குமார்,தினேஷ் பாபு ஆகிய நான்கு போ் கொண்ட மத்திய மருத்துவ குழுவினா் டெல்லியிலிருந்து விமான மூலம் சென்னை வந்துள்ளனர்.
இந்த குழுவினர் தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகள் நடத்தவுள்ளனர். இதன் பின்னர் ஆய்வின் முடிவுகளை மத்திய சுகாதாரத்துறையிடம் இந்த குழு அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications