மீண்டும் கண்ணீர்விட வைக்கும் வெங்காய விலை உயர்வு- சென்னை நிலவரம் என்ன? ஏற்றுமதி விலை நிர்ணயம்!
சென்னை: பொதுமக்களை மீண்டும் கண்ணீர் விட்டு கதற வைத்துக் கொண்டிருக்கிறது வெங்காய விலை உயர்வு. சென்னை கோயம்பேட்டில் 1 கிலோ பெரிய வெங்காயம் ரூ70; 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ 120-க்கும் சென்னை புறநகரில் 1 கிலோ பெரிய வெங்காயம் ரூ90; 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் அண்மையில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் வெங்காய விலை அதிகரித்துள்ளது.

வரத்து குறைவு: சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லா அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் வெங்காய வரத்து உள்ளது. நாளொன்றுக்கு 7,000 டன் வெங்காய வரத்து இருந்து வந்ததால் விலையும் சீராக இருந்தது. தற்போது திடீரென வெங்காய வரத்து குறைந்துவிட்டது. இதனால் வெங்காய விலை கிடுகிடுவென உயரத் தொடங்கிவிட்டது.
சென்னை நிலவரம்: சென்னை கோயம்பேட்டில் 1 கிலோ பெரிய வெங்காயம் ரூ70; 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ 120-க்கும் சென்னை புறநகரில் 1 கிலோ பெரிய வெங்காயம் ரூ90; 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் ஆறுதல்: அதேநேரத்தில் வெங்காய விலை உயர்வானது விவசாயிகளுக்கு பெரும் ஆறுதலையும் தந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், கடந்த 2,3 மாதங்களாக வெங்காயத்தை குறைவான விலைக்குதான் கொடுத்தோம். தற்போது வெங்காய விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கொஞ்சமாவது ஆறுதலும் வருவாயும் கிடைக்கும். ஆகையால் வெங்காய விலையை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
அரசு நடவடிக்கை: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வெங்காய ஏற்றுமதி விலையானது ஒரு டன்னுக்கு 800 டாலர் அதாவது ரூ66,700 என நிர்ணயித்துள்ளது. இந்த விலை நிர்ணயமானது இன்று முதல் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும்.
ராமதாஸ் கோரிக்கை: இதனிடையே சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தை மொத்த விலையில் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications