விடிவெள்ளியில் வந்த தீர்ப்பு! ஜெயித்துவிட்டோம் மாறா..எல்லாத்துக்கும் ‘அவங்க’ காரணம்! நெகிழ்ந்த ஓபிஆர்
சென்னை : மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் தந்திருப்பது சிறந்த தீர்வு, இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி எனவும், தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவாக தான் பார்க்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
Recommended Video
பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுவை நேற்று நள்ளிரவு தாக்கல் செய்தது.
அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த இந்த மனு மீது நீதிபதிகள் துரைசாமி மற்றும் சந்திரமோகன் அமர்வு நள்ளிரவில் விசாரித்தது.
நள்ளிரவில் விசாரணை
நீதிபதி துரைசாமி வீட்டில் வழக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவரது வீடு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விடிய விடிய நடைபெற்ற விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காரசார வாதங்களை முன்வைத்த நிலையில், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
ஒற்றைத் தலைமை தீர்மானம்
இதன் காரணமாக ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது என்பதால் ஓபிஎஸ் தரப்பு ஆறுதல் அடைந்து இருக்கிறது. இன்று பொதுக்குழுவில் அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களுக்கு நேற்று காலையிலேயே ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்கிவிட்டார். அதில் ஒற்றைத் தலைமை குறித்த கருத்துகள் இல்லை என்ற நம்பிக்கையில் தான் அவர், ஒப்புதல் அளித்தார்.
ஓபிஆர் நெகிழ்ச்சி
இந்த தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கும் நிலையில், தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவாக தான் பார்க்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் கூறியுள்ளார். தீர்ப்பு தொடர்பாக பேசிய அவர்,"மேல் முறையீட்டு வழக்கில் சிறந்த தீர்வு, இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவாக தான் பார்க்கிறோம்.இன்றைய பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்" என்றார்.
நீதிமன்றத்தில் மேல்முறையீடு
உயர்நீதிமன்றம் நள்ளிரவில் வழங்கிய உத்தரவால் ஓபிஎஸ் தரப்பு ஆறுதல் அடைந்துள்ள நிலையில், தர்மம் வென்றுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் மிகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அதே நேரத்தில் சற்றே எடப்பாடி தரப்பு ஆதரவாக இருந்தாலும், நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம் எனவும், அதிமுகவிற்கு பின்னடைவு என்பதே கிடையாது. இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.