ஆன்லைன் தேர்வு: ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஒரே நாளில் தனித்தனி அறிக்கை! இப்பதானே ஒன்னா டூர் போனாங்களே?
சென்னை: அனைத்து வகை கல்லூரிகளுக்கும் நேரடி செமஸ்டர் தேர்வு என்ற முறையை கைவிட்டு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அறிக்கைகள் மூலம் வலியுறுத்தி உள்ளனர். ஒரே பிரச்சனைக்காக அதிமுக தலைவர்கள் இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டிருப்பது அக்கட்சியினரை குழப்பத்தி ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது..
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நடப்பு செமஸ்டர் தேர்வை நேரடியாக நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டங்களை நடத்துகின்றனர்.
ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தி இருக்கின்றனர்; கொரோனா தொற்று குறித்த அச்சம் முழுமையாக விலகவில்லை; மழை வெள்ள பாதிப்பு தொடருகிறது; ஆகையால் ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை. இந்த கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
'இந்த இக்கட்டான நேரத்தில் நீங்க இதை செஞ்சே ஆகணும்'.. இளைஞர்களுக்கு ராமதாஸ் திடீர் வேண்டுகோள்!
வாபஸ் பெற கோரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் தேர்வுகளை நடத்த வேண்டும்; 710 மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
ஈபிஎஸ் தனி அறிக்கை
இந்நிலையில் அதிமுகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் அதிமுகவின் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இன்று காலையில் தனித்தனியே இது தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையினை பரிசீலித்து, போதிய நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், இந்த செமஸ்டருக்குண்டான பாடத் திட்டம் இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும், இந்த செமஸ்டருக்குண்டான பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிக்க முடியவில்லை என்பதையும், மாதிரித் தேர்வுகள் நடைபெறாததையும், அனைத்து மாணவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கல்லூரிக்கு வருகிறார்களா? என்பதை உறுதி செய்ய இயலாத நிலையையும் கருத்திற்கொண்டு நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும், மாணவ, மாணவியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ஓபிஎஸ்-ம் தனி அறிக்கை
இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதில் நேரடியாக தலையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற மாணவ, மாணவியரை அழைத்துப் பேசி, இந்த ஆண்டுக்கான பருவமுறைத் தேர்வினை ஆன்லைன் மூலமாக நடத்தவும் நேரடி வகுப்புகள் முழுமையாக நடைபெற ஆரம்பித்த பிறகு, நேரடித் தேர்வுகள் நடத்தவும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
என்னதாங்க நடக்குது?
இப்படி அதிமுகவின் இரு தலைவர்களும் ஒரே பிரச்சனைக்காக இன்று தனித்தனியே அறிக்கையை வெளியிட்டு இருப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இரட்டை தலைமை என்றாலும் தனி ஆவர்த்தனமாகத்தான் செயல்படுகின்றனர். சில நாட்களாகத்தான் இருவரும் இணைந்த கைகளாக செயல்பட்டு மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு திரும்பினர். அதற்குள்ளே இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தையும் கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது என கூறப்படுகிறது.