இரட்டை இலை ஓபிஎஸ்ஸுக்கா? ஆலோசனை கூட்டத்திற்கே அழைப்பு இல்லையாமே.. ‘திகுதிகு’ ஈரோடு இடைத்தேர்தல்!
சென்னை : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடைத்தேர்தல் விதிகளை பின்பற்றுவது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நடத்திய அனைத்து கட்சி ஆலோசனையில் ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி அணியினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், ஓபிஎஸ் அணியினர் பங்கேற்கவில்லை.
ஈபிஎஸ் தரப்பு சார்பில் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் துரைசாமி பங்கேற்றார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் அதிமுகவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில், அவரது அணியினர், இடைத்தேர்த்ல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி.. இரட்டை இலை முடங்குமா? ஓபிஎஸ் பரபர பேச்சு
இடைத்தேர்தல்
ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைதேர்த்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதோடு, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருவதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்து வருகிறது.
பாஜக நிலைப்பாடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிட தயாராகி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணியும் போட்டியிடுவதாக அறிவித்தார். இரு தரப்பினரும், கூட்டணி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது, இடைத்தேர்தலில் களமிறங்குமா? ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் ஒருவருக்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்விகள் நிலவி வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் பாஜகவின் திட்டம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
சின்னம் யாருக்கு?
கடந்த 7 மாதங்களாக அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இரு அணிகளாகச் செயல்பட்டு வரும் நிலையில் தங்கள் பலத்தை நிரூபிக்க இந்த இடைத்தேர்தலில் இரு தரப்பும் களம்காண இருக்கிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை கட்சியை நீக்கி, இடைக்கால பொதுச் செயலாளரான நிலையிலும், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இன்னும் உள்ளது. எனவே இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கக்கூடிய சூழல் உள்ளது.
ஓபிஎஸ் உறுதி
இதனால் இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தங்கள் அணியே உண்மையான அதிமுக என்றும், தங்களுக்கே இரட்டை இலை கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர். அதேசமயம், நேற்று ஓபிஎஸ் மா.செக்கள் கூட்டத்திற்குப் பிறகு பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இப்போது இருக்கும் ஒரே பதவி ஒருங்கிணைப்பாளர் பதவி தான். எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
ஈபிஎஸ் தரப்பு மட்டுமே
இதற்கிடையே, ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கான நடத்தை விதிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஈபிஎஸ் தரப்பைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் துரைசாமி பங்கேற்றார். ஓபிஎஸ் தரப்பிற்கு தனியாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் அணி சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.
மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
இந்த கூட்டத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்தும்,
அதனை அரசியல் கட்சிகள் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், பொதுக்கூட்டங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அரசியல் கட்சிகள் பின்பற்றும் நடைமுறைகள் என்ன என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் ஓபிஎஸ் அணிக்கு, மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டத்திற்கு அழைப்பே விடுக்கப்படாததைச் சுட்டிக்காட்டி ஈபிஎஸ் அணியினர் விமர்சித்து வருகின்றனர்.