அப்செட்டில் பல மாஜிக்கள்.. ‘டீல்’ - ஓபிஎஸ் தரப்புக்கு சாதக பலன்கள்.. விரைவில் அணி மாறும் படலம்?
சென்னை : எடப்பாடி பழனிசாமியின் பக்கம் நிற்கும் நிர்வாகிகள் பலர், தங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாததால் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகளால் ஓரங்கட்டப்பட்டவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் டீல் பேசி வருகின்றனர்.
ஓபிஎஸ் பக்கம் வந்தால் முக்கிய பதவிகள் அளிப்பதாக உறுதியளித்துள்ளதற்கு நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பதவிகள்
அதிமுக பொதுக்குழுவை நடத்தி முடித்து இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றியதோடு, ஓபிஎஸ்ஸை கட்டம் கட்டி, அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்தும் நீக்கினார் ஈபிஎஸ். அதிமுக தலைமை அலுவலகமும் எடப்பாடி கைக்கு சென்றுவிட்டது. வங்கிக் கணக்கு தொடர்பான விவகாரத்திலும் எடப்பாடிக்கு சாதகமான பலன் கிடைத்துள்ளது. மேலும், தனது ஆதரவாளர்கள் பலருக்கு முக்கிய பதவிகளை கொடுத்து குஷிப்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் பக்கம்
இந்நிலையில், தனது அணியை பலப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ஓபிஎஸ். முன்னர் அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்து தனக்கு ஆதரவாகச் செயல்பட வைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, ஒதுங்கி இருக்கும் பலர் ஓபிஎஸ் பக்கம் நகரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிருப்தியாளர்கள்
அதேபோல, ஈபிஎஸ் தனது ஆதரவாளர்கள் பலருக்கு முக்கிய பதவிகள் வழங்கியதிலும், சில மூத்த மாஜிக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஈபிஎஸ்ஸின் நெருக்கமான வளையமான மணி அன் கோ உள்ளிட்டோரால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் பலர் தங்களை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக புலம்பி வருகின்றனராம்.

ஓபிஎஸ் டீம் தீவிரம்
இந்நிலையில், எடப்பாடி தரப்பினரால் ஓரங்கட்டப்பட்டு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் தரப்பினர் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனராம். ஓபிஎஸ் பக்கம் வந்தால் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்து சில மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனராம். இந்த முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

பெரிதாகும் வட்டம்
தாங்கள் எதிர்பார்க்கும் பொறுப்புகளை அளித்தால், மீண்டும் கட்சியில் உத்வேகத்துடன் செயல்படுவதாக சிலர் உறுதி அளித்துள்ளனராம். இதைத் தொடர்ந்து, அவர்கள் மூலம், அதிருப்தியில் இருக்கும் மற்ற நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருகின்றனராம். இதனால், ஓபிஎஸ் தரப்பு தூது விட்டு வரும் வட்டம் பெரிதாகிக் கொண்டே செல்கிறதாம்.

ஷாக் கொடுக்க திட்டம்
ஈபிஎஸ் பக்கம் இருந்தாலும் அதிருப்தியில் இருந்து வரும் நிர்வாகிகளிடம் பேசி தங்கள் பக்கம் வர சம்மதிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், ஓபிஎஸ் தரப்பிலிருந்து நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த லிஸ்ட் ஈபிஎஸ் தரப்பினருக்கு ஷாக் கொடுக்கும் என்கிறார்கள் பன்னீர் தரப்பினர். காரணம், இந்த நிர்வாகிகள் பட்டியலில் இப்போது ஈபிஎஸ் பக்கம் இருப்பவர்கள் பலரது பெயரும் இடம்பெறலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications