இன்று மூக்கையா தேவர் நினைவுநாள்.. ஓபிஎஸ்-இன் முக்கிய நகர்வு! ஒருங்கிணையும் தென் மாவட்ட ஆதரவாளர்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமி உடனான அதிமுக தலைமை போட்டி தொடர்ந்து வரும் சூழலில் மூக்கையா தேவரின் நினைவு நாளான இன்று தனது தென் மாவட்ட ஆதரவாளர்களை திரட்டுகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.
பாதுகாப்பான பென்ஸ் காரில் பயணித்தும் சைரஸ் மிஸ்ரி மரணம் ஏன்? அரசு, மக்களுக்கு 6 பாடங்கள்
மூக்கையா தேவர்
இந்த நிலையில் மேல்முறையீடு செய்வது போன்ற அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்த P.K.மூக்கையா தேவரின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்படும் என அறிவித்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய தென் மாவட்ட ஆதரவாளர்களை திரட்டுகிறார்.
ஓ.பி.எஸ். அறிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இளமைப் பருவத்திலிருந்தே பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நீதிக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும் போராடியவரும்; அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றியவரும்; ஆறு முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவரும்; தற்காலிகப் பேரவைத் தலைவராக பணியாற்றிய அனுபவம் பெற்றவரும்; மக்களவை உறுப்பினராக சிறப்புடன் பணியாற்றியவரும்; 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது, அதனை எதிர்த்து வரலாற்று சிறப்புமிக்க உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியவரும்; உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகளை நிறுவி சாதி வேறுபாடின்றி ஏழையெளிய மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்கும் வசதி, உணவு ஆகியவற்றை வழங்கியவரும்; தன்னுடைய அரசியல் ஆசான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மதுரை, கோரிப்பாளையம், வைகைக் கரையில் பிரம்மாண்டமான சிலையை நிறுவிய பெருமைக்குரியவருமான P.K. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினமான 06-09-2022 (செவ்வாய்க் கிழமை) அன்று காலை 11-00 மணிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் P.K. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
12 பேர்
1. R.கோபாலகிருஷ்ணன், Ex. M.P. அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
2. A. சுப்புரத்தினம், Ex. M.L.A. அவர்கள், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
3. K. முருகேசன் அவர்கள், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
4. S.P.M. சையது கான், Ex. M.P. அவர்கள், தேனி மாவட்டக் கழகச் செயலாளர்
5. ப. ரவீந்திரநாத், M.P. அவர்கள், அஇஅதிமுக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர்
6. ஆர். தர்மர், M.P. அவர்கள், இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்
7. P.அய்யப்பன், M.L.A. அவர்கள், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர்
8. மேலூர் S.A. பாஸ்கரன் அவர்கள், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
9. G.R. ராமமூர்த்தி அவர்கள், மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
10. K.R. அசோகன் அவர்கள், சிவங்கை மாவட்டக் கழகச் செயலாளர்
11. S.B. பசும்பொன் அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஒன்றியக் கழகச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்.
12. P. சுப்ரமணியன் அவர்கள், வேடசந்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள்.
அழைப்பு
மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. முருகேசன் அவர்கள் மேற்கொள்வார். மேற்படி நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு திரு. மூக்கையா தேவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.