அந்த டீம்.. டக்குனு மாறிட்டாங்க.. ஓபிஎஸ் மௌனமே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம்.. கே.பி.முனுசாமி தாக்கு!
சென்னை : ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மௌனமாக இருந்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் ஜெ. மரணமடைந்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சசிகலாவை குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக்கூட்டத்தில் அதுபற்றி பேசிய ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, 32 ஆண்டுகால ஜெயலலிதாவின் தோழி எனச் சொல்லிக் கொண்டிருந்த சசிகலா துரோகியாக செயல்பட்டுள்ளார் என விமர்சித்துள்ளார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவுக்கு ஆதரவாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்காமல் மௌனமாக இருந்ததால் ஜெயலலிதா இறந்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

கேபி முனுசாமி பேச்சு
அதிமுகவின் 51-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான அசோக் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, கலந்து கொண்டு பேசினார்.

சசி கட்டுப்பாட்டில் ஜெ.
அப்போது பேசிய கேபி முனுசாமி, "ஜெயலலிதா மறைவு குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட 75 நாள் சிகிச்சை தொடர்பாக யாரெல்லாம் உத்தரவு பிறப்பித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை சசிகலா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் தான் சொல்லும் சிகிச்சையைத் தான் அளிக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்க மறுத்த சசிகலா
பல நாடுகளில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவை பரிசோதித்ததில் அவருக்கு இதய கோளாறு இருந்ததையும், அதற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சசிகலா மறுத்துவிட்டார் என்றும் அதனை மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தர்மத்தைக் கொன்ற ஓபிஎஸ்
அப்போது பொறுப்பு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவர் தான் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவுக்கு ஆதரவாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்காமல் மௌனமாக இருந்ததால் தர்மம் செத்து விட்டது, ஜெயலலிதாவும் இறந்துவிட்டார்.

சசிகலா குடும்பம்
ஜெயலலிதா மரணத்திற்கு காரணகர்த்தா சசிகலா என நீதியரசர் ஆறுமுகசாமி தெளிவாக கூறியுள்ளார். 32 ஆண்டுகால ஜெயலலிதாவின் தோழி எனச் சொல்லிக் கொண்டிருந்த சசிகலா, இவ்வளவு பெரிய துரோகியாக செயல்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் புகழை வைத்து பல்லாயிரம் கோடிகளை சசிகலா குடும்பம் சம்பாதித்துள்ளது.

அந்த ‘டீம்’
ஜெயலலிதாவை முன்னிறுத்தி ஒரு டீம் செயல்பட்டது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதுமே அந்த டீம் சசிகலா கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. சிகிச்சை அளிக்க வேண்டிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் சசிகலா கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. ஆனால், ஜெயலலிதாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் சசிகலாவுக்கு இல்லை." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications