முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.. ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டுகள்.. எகிறும் ஜேசிடி பிரபாகர்!
சென்னை: சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தீர்மானத்தில் ஓபிஎஸ் 5 நிமிடங்கள் மட்டுமே பேசியதாகவும், எடப்பாடி பழனிசாமி 10 நிமிடங்கள் பேசியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் விமர்சித்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் ஏற்பட்டது. இதனால் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்ற பேச்சு எழும்போது, ஏற்கனவே பொதுக்குழுவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை உள்ளது.
திருப்பிப்போட்ட ஓபிஎஸ் டீம்.. 'வீடியோ’.. ஆவணங்களை எடுத்துச் சென்றது ஏன்?- ஜேசிடி பிரபாகர் பதில் மனு!
ஜேசிடி பிரபாகர் பேட்டி
அந்தப் பதினோரு பேர் யார் என்பதையும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும் ஒரே சமயத்தில் அறிவிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த பதினோரு பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஐந்து பேரும் ஈபிஎஸ் தரப்பில் இருந்து ஆறு பேரையும் தேர்ந்தெடுக்கலாம் என்று பேசப்பட்டது.
இபிஎஸ் மீது குற்றச்சாட்டு
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் விவாதித்த போது அந்த பெயர்களை தர அவர் மறுத்தார். அதோடு இவற்றையெல்லாம் பொதுக்குழுவில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். ஓபிஎஸ் முதல்வர் பதவியை விட்டுத்தர தயாராக இருந்த போதும் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை நியமிக்க காலதாமதப்படுத்தியது யார் என்று கேள்வி எழுப்பினார்.
தீர்மானங்கள்
தொடர்ந்து, பதினோரு பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்ட போதும் அதற்குப் பிறகு நடந்த பொதுக்குழுவின் தீர்மான புத்தகத்தில் அதைப்பற்றி எதுவும் இடம்பெறவில்லை. பின்னர் வெறும் வாய்மொழியாக அந்த தீர்மானத்தை வாசித்தார்கள். தங்கமணி இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல தொண்டர்களை ஏமாற்றும் நோக்கத்தில் ஓபிஎஸ் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகள் வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஓபிஎஸ் பேசிய 5 நிமிடங்கள்
அதேபோல ஓபிஎஸ் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை பாராட்டி பேசியதாக தங்கமணி கூறினார். இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுகளை ஓபிஎஸ் மீது வைத்து வருகிறார்கள். ஆனால் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தில் ஓபிஎஸ் பேசியபோது, மொத்தம் ஐந்து நிமிடம் மட்டுமே ஓபிஎஸ் அந்த தீர்மானத்தில் பேசி இருந்தார். அவருடைய பேச்சு திமுக பக்கம் சாய்வது போல் அதிமுக தொண்டரை புண்படுத்துவது போல் இருக்கிறதா என்று அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். வேண்டுமென்றே அபாண்டமாக ஓபிஎஸ் திமுகவை ஆதரித்து பேசியதாக கூறி வருகிறார்கள்.
இபிஎஸ் பேசிய 10 நிமிடங்கள்
ஆனால் இதற்கு முன்பு இபிஎஸ் கலைஞர் கருணாநிதியின் இரங்கல் தீர்மானத்தில் பத்து நிமிடம் பேசியிருந்தார். அப்போது அவர் கருணாநிதியின் இளமைக்காலம் முதல் முதுமை காலம் வரை பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசினார். இருவர் பேசியதுமே நான் தவறு என்று கூறவில்லை.
ஆனால் ஓபிஎஸ் பேசியதை மட்டும் வைத்துக்கொண்டு அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசினார்.
முயற்சி ஒருபோதும் நடக்காது
அதனால் ஓபிஎஸ் பதவியில் இருக்கக் கூடாது என்று சதித்திட்டம் தீட்டுகின்றனர். எனவே வரும்காலங்களில் இது போன்ற அபாண்டமாக குற்றச்சாட்டுகளை வைத்து தொண்டர்களை எங்களிடம் இருந்து பிரிக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது என்று கூறினார்.