"எம்ஜிஆர் கனவை காப்பாத்திட்டோம்.. எடப்பாடியை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது" - வைத்திலிங்கம் பேட்டி!
சென்னை : எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்று அறிவித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமியை அவர்களது ஆன்மா மன்னிக்காது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஜூலை 11-ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதன் மூலம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாகவே செயல்படுவார்கள்.
தீர்ப்பு வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் வெளியேயும், ஓபிஎஸ் இல்லத்தின் முன்பும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதிரடி தீர்ப்பு
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றாகியுள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர்.
எம்.ஜிஆர் வகுத்த விதி
இந்தத் தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவை ஆரம்பித்தபோதே ஒரு விதியைக் கொண்டு வந்தார். பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதரவின் மூலம் தான் அவரை திமுகவில் இருந்து நீக்கினார்கள். அதனை மனதில் வைத்து, அதிமுகவின் தொண்டர்களால் தான் பொதுச் செயலாளர், தலைமைப் பதவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்ட விதியை வகுத்தார்.
தீர்மானம் காப்பாற்றப்பட்டுள்ளது
எம்.ஜி.ஆர் வகுத்த விதி, இன்றைக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, பொதுக்குழுவில் ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானமும் இன்று காப்பாற்றப்பட்டிருக்கிறது. தொண்டர்களுக்கு ஜெயலலிதா கொடுத்த மரியாதை இன்று நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
ஆன்மா மன்னிக்காது
யதேச்சதிகாரமாக செயல்பட்டி, எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் இந்த இயக்கத்திற்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்று அறிவித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது." எனத் தெரிவித்துள்ளார். v