இதுக்கு பெயர் பதவி ஆசை இல்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம்!
சென்னை: பதவி ஆசையால் மட்டுமே அதிமுக இணைப்புக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுப்பதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

ஓபிஎஸ் பற்றி எடப்பாடி
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து, எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுக இணைப்புக்கு அழைப்பு விடுப்பவர் தான் ஓ பன்னீர் செல்வன். நானும் தன் மகனும் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய மகன் எம்.பி. ஆகவும், மற்றொருவர் மத்திய அமைச்சராக வேண்டும். மற்றபடி ஓபிஎஸ்-க்கு வேறு யாரைப்பற்றியும் கவலையில்லை.

பதவி ஆசை இல்லை
அப்படி இருந்தால் எப்படி இணைய முடியும்? எந்த அடிப்படையில் இணைப்பு பத்தி பேசுகிறார்? கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நான் எப்பொழுதும் சொந்தக்காலில் நிற்க விரும்புபவன். கட்சிக்கு சோதனையான காலங்களிலும் உண்மையாக செயல்பட்டுள்ளேன். எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை என்று தெரிவித்தார்.

இபிஎஸ்-க்கு கண்டனம்
ஓபிஎஸ் பதவி ஆசையால் தான் அதிமுக இணைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சி ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் ஓபிஎஸ்-ன் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்திருப்பதன் மூலம், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படுவதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கேள்வி
அதேபோல் முதலமைச்சர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், ஒற்றைத் தலைமை என ஒவ்வொரு முறையும் ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எதிர்க்கட்சித்தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என பல்வேறு பதவிகளுக்காக மோதிய எடப்பாடி பழனிசாமிக்கு பதவி ஆசை இல்லையா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications