ஜெ. நினைவிடத்தில் ‘சபதம்’ எடுத்த ஓபிஎஸ் டீம் புள்ளிகள்! நியமனத்தில் வேகம்.. அடுத்த அதிரடிக்கு ரெடி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள், சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் ஏற்றுக்கொண்டனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள், தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்.வி.சதீஷ் தலைமையில் ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜலட்சுமி, இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகரன் ஆகியோரும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே உட்கட்சி பூசல்கள் நீடித்து வரும் நிலையில், கட்சியைக் கைப்பற்றுவதில் இருவருமே தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முடிவைப் பொறுத்து தான் அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதோ, சின்னம் முடக்கப்படுமா என்பதோ தெரியவரும்.

கட்சியை விட்டு நீக்கம்
பொதுக்குழுவை நடத்தி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். அதேசமயம், ஓபிஎஸ், தான் தான் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இரு தரப்புமே, தனித்தனியாக புதிதாக நிர்வாகிகளையும் நியமித்துள்ளனர்.

வலைவீசி
இந்நிலையில், தென் மாவட்டங்களிலும் தனது பலத்தை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் 10.4 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கி ஓ.பன்னீர்செல்வம் கெத்து காட்டினார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அனைத்து மட்டத்திலும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓபிஎஸ். அவர்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஆட்களை வலைவீசி தூக்கி வருவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

புதிய நிர்வாகிகள்
எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக உள்ள சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகளை நியமித்த ஓபிஎஸ் சமீபத்தில் சென்னை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகளை நியமித்த்தார். அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்த பின்னர் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ். சென்னையில் நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் தென் சென்னை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமையில் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுக் கொண்டனர்.

ஓபிஎஸ் டீம் உறுதிமொழி
புதிய நிர்வாகிகள் ஜெ.நினைவிடம் முன்பு நின்று, "எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் தனக்கு பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையோடு சட்டமன்றத்தில் தீர்க்கத்தரிசனத்துடன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் பதவி வெறி பிடித்த சுயநல சக்திகளால் பொன்விழா கண்ட அதிமுக பிளவுபட்டு கிடக்கிறது. லட்சோப லட்சம் தொண்டர்களின் நலன் காக்க அதிமுகவின் ஒரே நம்பிக்கையாக விளங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் நல்லாட்சியை அமைப்போம்.

ஓபிஎஸ் தலைமையில்
அதற்காக அதிமுகவின் புதிய நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது பாகுபாடின்றி உழைப்போம், எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நல்லாட்சி அமைய அதிமுக கட்சியின் நிர்வாகிகள் என்ற முறையில் நாங்கள் அனைவரும் உண்மையாகவும், கடுமையாகவும் உழைப்போம்" என்று உறுதிமொழி எடுத்தனர். மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜலட்சுமி, இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகரன் ஆகியோரும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications