இரட்டை இலையை முடக்கிடலாம் என எண்ணுகிறார்கள்..பெரும்பான்மை இருந்தால் நிரூபியுங்க.. ராஜன் செல்லப்பா
ஓபிஎஸ் தரப்பினர் வெறும் 1 விழுக்காடு, 2 விழுக்காடு வைத்துக்கொண்டு அதற்கான நியாயங்களை கற்பிக்க முயல்கிறார்கள் என்று அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறினார்.
சென்னை: தேர்தல் ஆணையத்தில் எதாவது தவறை சுட்டிக்காட்டுவோம். அதன் மூலம் இரட்டை இலையை முடக்கிவிடலாம் என்று தவறான சிந்தனையை ஓபிஎஸ் தரப்பினர் வைக்கின்றனர் என்று அதிமுக எம்.எல்.ஏ.வும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ராஜன் செல்லப்பா கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை அக்கட்சியின் பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவு அதிமுக அவைத்தலைவர் மூலமாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இடையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவளிப்போம் என ஓபிஎஸ் அறிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு
நீதிமன்ற தீர்ப்புப்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வேட்பாளர் ஒப்புதல் படிவம் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டது. இந்த படிவங்கள் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மூலம் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்த வேட்பாளரான தென்னரசு பெயர் மட்டும் அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமான வகையில் செயல்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, அதிமுக எம்.எல்.ஏ.வும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டார்
ஓபிஎஸ் தரப்பினர் இப்படி பேட்டி கொடுப்பார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான். தங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தவர்கள் புறக்கணிப்பது வாடிக்கையான ஒன்றுதான். உச்ச நீதிமன்றம் கொடுத்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டார் என்றுதான் நம்புகிறேன். இரட்டை இலையை ஆதரிக்கிறேன் என்று சொன்னார். மரியாதையோடு உச்ச நீதிமன்றம் கொடுத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். அதை பயன்படுத்த தவறிவிட்டார்.

இரட்டை இலையை முடக்கிவிடலாம் என்று
பொதுக்குழு எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டு இருந்தால் ஒரு நியாயமான அரசியல்வாதியாக இருக்கலாம். அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இல்லை. அவர்களை சார்ந்தவர்களுக்கும் இல்லை. ஆகவேதான் இன்றைக்கு அவர்கள் பேட்டியை கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் எதாவது தவறை சுட்டிக்காட்டுவோம். அதன் மூலம் இரட்டை இலையை முடக்கிவிடலாம் என்று தவறான சிந்தனையை அவர்கள் வைக்கிறார்கள்.

மாற்று வேட்பாளர் வேண்டுமா
ஆனால் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை கொடுத்து இருக்கிறது. மாற்று வேட்பாளர் வேண்டுமா.. அதை குறிப்பிடுங்கள் என இடத்தை அவைத்தலைவர் கொடுத்து இருக்கிறார். மாற்று வேட்பாளர் எண்ணம் இருந்தால் அதை குறிப்பிடுங்கள் என கட்டத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு வேட்பாளருக்கு மெஜாரிட்டி கொடுத்தால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளப்போகிறது. அதை நிரூபிக்கட்டுமே.

தைரியம் இருக்கிறதா?
மாற்று வேட்பாளர் கொடுக்கிறோம். இவ்வளவு பேர் பொதுக்குழுவில் மெஜாரிட்டி இருக்கிறார்கள். என்று ஒரு பட்டியலை போட்டு அவைத்தலைவரிடம் கொடுத்து பார்க்கட்டும். ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிக்கிறோம் என்று ஓபிஎஸ் தலைமையில் இருப்பவர்கள் கொடுக்கட்டும். இப்படி கொடுப்பத்ற்கு தைரியம் இருக்கிறதா? கொடுக்க முடியுமா? அதற்கான வாய்ப்பு உள்ளதா? நிச்சயமாக இல்லை.

நிச்சயமாக அங்கீகரிக்கும்
வெறும் 1 விழுக்காடு, 2 விழுக்காடு வைத்துக்கொண்டு அதற்கான நியாயங்களை கற்பிக்க முயல்கிறார்கள். உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை கொடுத்துள்ளது. 2,500 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி முன்மொழிந்த கே.எஸ் தென்னரசுவை வழிமொழிந்து இருக்கிறார்கள். இதை தேர்தல் ஆனையத்திடம் முறையாக எங்கள் அவைத்தலைவர் அளிப்பார். தேர்தல் ஆணையம் நிச்சயமாக அதை அங்கீகரிக்கும் என்று முழுமையாக நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications