பெரியாருக்கு “வாழ்த்து”.. சைடு கேப்பில் எடப்பாடிக்கு “குத்து” - ஓபிஎஸ் ட்வீட்டை கவனிச்சீங்களா?
சென்னை: தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் அந்த வாழ்த்தின் மூலமாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
திராவிடர் கழக நிறுவனரும், சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

திமுக மரியாதை
அந்த வகையில் சென்னை அண்ணா சாலை சிம்சன் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு மலர்தூவி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி சமூக நீதி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

ஸ்டாலின் வாழ்த்து
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம் என்றார்.

எடப்பாடி பழனிசாமி
இதேபோல், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர், பல்வேறு சமூகநீதி போராட்டங்களை முன்னெடுத்து வென்ற சமத்துவவாதி, பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர், தன்னலமற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளில் அவரின் பெரும்புகழை வணங்கி போற்றுகிறேன்." என தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
இதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தந்தை பெரியாரின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றிபெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது." என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்தை வெளியிட்டு உள்ளார்.

எடப்பாடி மீது விமர்சனம்
அதிமுக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே உட்கட்சிப்பூசல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவை சந்தித்து இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் பெரியாரின் கருத்தைவைத்தே அவரை வாழ்த்துவதைபோல் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications