பூமிக்கு அடியில் மின் கேபிள் சாத்தியமில்லை.. உயர் அழுத்த மின் கோபுரம்தான் ஒரே வழி: தமிழக அரசு
சென்னை: பூமிக்கு அடியில் மின்சார வயர்களை கொண்டு செல்வது இயலாத விஷயம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொண்டு வருவதற்காக, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்கள் வழியாக 16 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாய அமைப்பினருடன் தமிழக அரசு நடத்திய, பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாய சங்கத்தினர்.
இது குறித்து இன்று, அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டு அறிந்தார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். சட்டசபையில் இந்த பிரச்சனையை பேசுவதாகவும் அவர் உறுதியளித்தார். உயர் மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக இன்று சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின்போது ஸ்டாலின் பேசுகையில், விவசாயிகள் கூறுவதை போல, உயரழுத்த மின்கோபுரத்திற்கு பதிலாக, பூமிக்கு அடியில் மின்சார கேபிள்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பூமிக்கு அடியில் வெகுதூரத்திற்கு, மின்கம்பி அமைப்பது சாத்தியம் கிடையாது. அதற்கு அதிக பொருட்செலவு தேவைப்படும். உயரழுத்த மின் கோபுரங்களால் விவசாய நிலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இப்படியே ஒவ்வொரு திட்டத்தையும் எதிர்த்து போராடிக் கொண்டே இருந்தால், தமிழகத்திற்கு எந்த திட்டமும் வராது என்று தெரிவித்தார்.
இதன் மூலம் பூமிக்கு அடியில் மின்சார கேபிள்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்துள்ளது. இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.