என்னது தடுப்பூசிகளை காணாமா.. மர்மத்தை அவிழ்க்க சொல்லும் ப.சி. கிடுக்குப்பிடி கேள்வி
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் பி.சிதம்பரம் , நாட்டில் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை தணிக்கை செய்ய சிஏஜி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பொதுமக்கள் கோபம் வீதிக்கு வருவதற்கு முன்பு 'காணாமல் போன தடுப்பூசிகளின் மர்மத்தை' அவிழ்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் இன்று வெளியிட்ட ட்வீட்களில் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். "காணாமல் போன தடுப்பூசிகளின் மர்மம் குறித்த கேள்விகள் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. ஒரு பேட்ஜ் தடுப்பூசிகளை தயாரிக்க குறிப்பிட்ட அளவிற்கு நேரம் தேவை என்று பாரத் பயோடெக் கூறியது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
'திறன்' என்பது ஒரு விஷயம் என்பதையும், 'உற்பத்தி' என்பது வேறு விஷயம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் இரண்டு உள்நாட்டு உற்பத்தியாளர்களால் (சீரம், பாரத் பயோடெக்) இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட உண்மையான அளவு என்ன என்பதை தேசம் அறிய விரும்புகிறது. இதுவரை தயாரிக்கப்பட்ட உண்மையான உற்பத்தியை மக்கள் அறிந்தே ஆகவேண்டும்., தேதி வாரியாக யார் யாருக்கு வழங்கப்பட்டது என்ற விவரத்தை கண்டிப்பாக சொல்லவேண்டும்:" என்று ப சிதம்பரம் கூறியுள்ளார்
எங்கிருந்து கிடைக்கும்
ரிலையன்ஸ் குழுமம், எச்.சி.எல் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் வணிக பங்காளிகளுக்கு தடுப்பூசி போடுவதாக வெளியிட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்ற ப சிதம்பரம், "மாநில அரசுகள் எந்தவொரு உற்பத்தியாளரிடமிருந்தும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தடுப்பீசிகளை பெற முடியாது. எனவே, கார்ப்பரேட்டுகள் தங்களுக்கு தேவையான தடுப்புசிகளை எங்கிருந்து பெற முடியும்.
மர்மம் அவிழணும்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு உள்நாட்டு உற்பத்தியாளர்களின் (பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட்) உற்பத்தி திறன், அவர்கள் அதுவரை தயாரித்தது, அனுப்பியது, மக்களுக்கு வழங்கியது மற்றும் அவர்களின் தடுப்பூசிகள் மொத்தமாக பெற்றவர்கள் பட்டியல்களை சிஏஜி அமைத்து முழு அளவிலான தணிக்கை நடத்துவது தான் தற்போதைக்கு சரியான விஷயம். தடுப்பூசிகளின் பற்றாக்குறை குறித்த பொதுமக்கள் கோபம் வீதிகளில் கொட்டுவதற்கு முன்பு காணாமல் போன தடுப்பூசிகளின் மர்மத்தை இப்போது அவிழ்த்து விடுவது நல்லது, " இவ்வாறு கூறியுள்ளார்.
பற்றாக்குறை ஏன்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டிருந்த பேஸ்புக் பதிவில், நரேந்திர மோடி அரசாங்கத்தின் "திட்டமிடுவதில் திறமையின்மை மற்றும் 2020ம் ஆண்டில் 700%த்திற்கும் அதிகமாக ஆக்சிஜனை ஏற்றுமதி செயததன் விளைவைத்தான் கடந்த மாதம் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் இந்த தேசம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை கண்டது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
வங்கதேசம் அனுப்பியது ஏன்
பிரியங்கா காந்தி தனது பதிவில், "ஆக்சிஜன் வசதி மற்றும் மிக அடிப்படையான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மக்ள் இறந்து போகும் சூழ்நிலைக்கு யார் காரணம் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு யார் பொறுப்பு" என்றும் அவர் கேட்டுள்ளார், "மோடி அரசு தனது ஆக்ஸிஜன் ஏற்றுமதியை 2020 ஆம் ஆண்டில் ஒரு தொற்றுநோயான ஆண்டாக 700% அதிகரித்துள்ளது. இந்த விநியோகத்தில் பெரும்பாலானவை வங்கதேசத்திற்கு சென்றது எனறும் கூறியுள்ளார்.
கேட்கவில்லை அரசு
இரண்டாவது COVID-19 அலைகள வருவதற்குள் ஆக்சிஜன் நிரப்பும் கிரையோஜெனிக் டேங்கர்களை (சுமார் 1200-1600 என மதிப்பிடப்பட்டுள்ளது) அதிகரிக்க மோடி அரசு எதுவும் செய்யவில்லை. ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளையும் கண்டுகொள்ளவில்லை என்றும் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.