கரும்பு ‘ஓசி’ தமிழர் தன்மானத்துக்கே இழுக்கு.. “சீமானின் பக்குவமற்ற அரசியல்”.. கொந்தளித்த பாரிசாலன்!
சென்னை : திராவிட அரசுகள் முன்னெடுத்து வரும் இலவச திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கக்கூடிய தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பாரிசாலன், தற்போது பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். பொங்கலுக்கு கரும்பை இலவசமாக வழங்குவது தமிழர் தன்மானத்திற்கு இழுக்கு என ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் கடுமையாக விமர்சித்துள்ளார் பாரிசாலன்.
தமிழ்ச் சமூகத்தில் 'இலுமினாட்டி' என்ற பதத்தை பரவலாக்கியவர்களுள் முக்கியமானவர் பாரிசாலன். கடந்த ஆறேழு ஆண்டுகளில், அரசியல், சினிமா என எல்லா வகைமைகளிலும் இலுமினாட்டிகளின் குறியீடுகளைக் கண்டுபிடித்து விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில், நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பேசியுள்ள பாரிசாலன், தமிழக அரசியல் நிலை பற்றி தனது கருத்துகளை முன்வைத்துள்ளார். இனி அவரது பேட்டி:
திராவிடக் கட்சிகளின் தோல்வியால் ஜாதியின் பெயரால் தமிழகத்தில் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்– சீமான்
தமிழர் தன்மானத்திற்கு இழுக்கு
கேள்வி : தமிழக மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு முன்னர் இடம்பெறாத நிலையில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இலவசத்திற்கு எதிராகப் பேசும் தமிழ் தேசியவாதிகள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : இலவசம் என்பதே ஒரு தவறான கலாச்சாரம். இந்த திராவிட அரசுகள் சமூக நீதி என்ற பெயரில் மக்களுக்கு லஞ்சம் கொடுக்கின்றன. தன்மானம் கொண்ட தமிழினத்துக்கு இது இழுக்கு. தமிழ்ச் சமூகம், உழவு செய்து அறுவடை செய்யும் பயிர்களை வைத்துக் கொண்டாடுவதுதான் பொங்கல் பண்டிகை. ஆனால் அந்த அடிப்படையே அடிபட்டுப் போகிறது. ஓசியில் வாங்கித்தான் பொங்கல் பண்டிகை கொண்டாடும் சூழல் இருக்கிறது என்றால் பொங்கல் விழாவின் சிறப்பையே கெடுத்துவிடும். கரும்பு விவசாயிகளிடம் இருந்து பொதுமக்களுக்கு சரியான விலையில் கரும்பு செல்கிறதா என்பதை மேற்பார்வை செய்ய வேண்டுமே தவிர நாங்களே இலவசமாக கொடுக்கிறோம், நீங்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுங்கள் என்பது தமிழ் இனத்தின் தன்மானத்துக்கு இழக்கு.
லாபி - மாஃபியா
கேள்வி : சீமான் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக, விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், தமிழக அரசே கரும்புகளை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களே?
பதில் : விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு சந்தையில் ஏற்ற விலை கிடைப்பதில்லை. பொருளை உற்பத்தி செய்பவர்கள்தானே விலையை தீர்மானிக்க வேண்டும். ஆனால், அந்த நிலை இல்லை. இடையில் அரசியல் 'லாபி' செயல்படுகிறது. அவர்கள் வைப்பதுதான் விலை. அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்கவில்லை என்றால், வேறு எங்கும் விற்க முடியாது. ஒரு மாஃபியா போல செயல்படுகிறார்கள். அரசு, இன்றைய நாளுக்கு இதுதான் சந்தை விலை என நிர்ணயித்து விட்டால் போதும். விவசாயிகளும் பலன் பெறுவார்கள். பொதுமக்கள் உரிய காசு கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். நம்முடைய செல்வத்தை வைத்துத்தான் பொங்கலை கொண்டாட வேண்டும். இலவசத்தை வைத்து கொண்டாடக் கூடாது.
இலவசங்களை எதிர்க்கலாமா
கேள்வி : வாங்கும் பொதுமக்கள் சிரமப்பட வேண்டாம் என்றுதானே அரசு இலவசமாக தருகிறது? ஒட்டுமொத்தமாக இலவசங்களை எதிர்க்கலாமா?
பதில் : கடந்த ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் மின் கட்டணம், வீட்டு வரி எவ்வளவு உயர்ந்திருக்கிறது? இங்கெல்லாம் மக்கள் மீது அரசுக்கு கரிசனம் வரவில்லை. இப்போது மட்டும் என்ன? மக்களிடம் பிடுங்கி, இப்படி கொடுக்க வேண்டாம். நீங்கள் மக்களிடம் பணத்தைப் பறிக்கவில்லை என்றாலே அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். வரிகளை எல்லாம் குறைத்துவிட்டாலே மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இலவசமாக லேப்டாப், சைக்கிள் எல்லாம் கொடுக்க வேண்டாம். உயர்தரமான கல்வியை முழுமையாக இலவசமாக கொடுங்கள். கொஞ்சம் காசு சேர்த்தவர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அப்படியென்றால் அரசாங்கம் கல்வியை சரிவர வழங்குவதில்லை என்றுதான் அர்த்தம். பொருளாதார வசதி இருப்பவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ப்பதில்லை. அதிலிருந்தே நிலைமையை புரிந்து கொள்ளலாம்.
சவுக்கு சங்கர் + சீமான் vs உதயநிதி
கேள்வி : உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிடப் போவதாகச் சொன்ன சவுக்கு சங்கர், சீமானை சந்தித்தார். சீமானும், உதயநிதிக்கு எதிராக நானே சங்கரை நிறுத்துவேன் எனக் கூறினார். அப்போது சவுக்கு சங்கருடன் சீமான் இணைவது சீமானுக்கு ஆபத்து எனச் சொல்லி இருந்தீர்களே.. ஏன்?
பதில் : சவுக்கு சங்கர் ஒருபோதும் தமிழ் தேசிய கருத்துகளை ஏற்றுக்கொண்டவர் கிடையாது. சீமான் தனது கருத்தியலை ஏற்பவர்களையே முன்னிலைப்படுத்துவேன் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார். இதனால், சவுக்கு சங்கரை வேட்பாளராக நிறுத்துவேன் என்று சீமான் சொல்வது அவரது நம்பகத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கிறேன். சவுக்கு சங்கர் நாதகவின் அடிப்படை கொள்கையுடனே முரண்பட்டவர். அவரை தனது சின்னத்தில் நிறுத்துவேன் என்பது பக்குவமற்ற பேச்சு. உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கரை நிறுத்தினால், உதயநிதிக்கு எதிரான வாக்குகளை சங்கரும், அதிமுகவும் பங்கிடுவார்கள். இதனால் எளிதாக உதயநிதி வெற்றி பெறுவார். இதனால், இந்த வியூகம் முட்டாள்தனமானது. அதற்குப் பதிலாக உதயநிதிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாமல், உதயநிதிக்கு எதிராக வேறு கட்சியில் இருக்கும் வலிமையான வேட்பாளரை ஆதரித்தால் உதயநிதியை வீழ்த்தலாம். ஆனால், உதயநிதிக்கு எதிரான வாக்குகளை உடைத்து அவரை எளிதாக ஜெயிக்கத்தான் வைப்பீர்கள். இது சரியான திட்டம் கிடையாது.
வாரிசு அரசியல்
கேள்வி : உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருப்பதை வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் திமுகவினர் அதை ஏற்க மறுக்கின்றனரே?
பதில் : அப்பட்டமான வாரிசு அரசியல். உதயநிதி ஸ்டாலின் திமுகவில் இதுவரை பெரியளவில் பங்காற்றவில்லை. இப்போதுதான் தடதடவென அரசியலில் நுழைந்து அமைச்சராகிறார். இந்த உடனடி வளர்ச்சி எதனால் வருகிறது? ஸ்டாலின் அவரது தந்தை என்ற அடிப்படையில் தானே சாத்தியப்படுகிறது? மற்றவர்களால் இவ்வளவு எளிதாக வாய்ப்புகளைப் பெற முடியுமா? அமைச்சர் நேரு, இன்பநிதியை கூட கொண்டு வருவோம் என்கிறார். இதை எப்படி வாரிசு அரசியல் இல்லை என்று மறுக்க முடியும்? இது மக்களுக்கு, கொள்கைகளுக்கு எதிரான செயல்பாடு. மக்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை என்பதால் தான் இது தொடர்கிறது. இப்படியே சென்றால் மக்களாட்சியில் இருந்து மீண்டும் மன்னராட்சிக்குச் சென்றுவிடும்.
வேறு ஆளே இல்லையா
கேள்வி : முதல்வர் ஸ்டாலின் நீண்டகாலமாக கட்சியில் உழைத்தவர், பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருக்கு பதவிகள் கிடைத்தன. அவரையும் வாரிசு அரசியல் என்றுதானே விமர்சிக்கிறார்கள்?
பதில் : ஸ்டாலினை விட அதிகமாக கட்சிக்காகக் பணியாற்றிய தலைவர்கள் திமுகவில் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஸ்டாலினுக்கு இந்த பதவி எப்படி வந்தது என்றால் அவர் கருணாநிதியின் மகன் என்பதால் தான். அவ்வளவுதான் விஷயம். ஸ்டாலினைக் காட்டிலும் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் திமுகவில் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் வாரிசு அரசியல் என்கிறோம். அங்கு வேறு யாருமே இல்லை, இவர்தான் இருக்கிறார் என்றால் அது வேறு. அங்கு இவரை விட தகுதியானவர்கள் பலர் இருந்தும் இவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் தான் அதை வாரிசு அரசியல் என்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.