கணவர் மரணத்திற்கு நீதி வேண்டும்.. ஊராட்சித் தலைவர் மனைவி டிஜிபியிடம் கண்ணீர் மல்க மனு
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை என அவரது மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கணவர் சாதிவெறிக் காரணமாக கொல்லப்பட்டதாகவும், அவரை கொலை செய்த கும்பல் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஊராட்சித் மன்றத் தேர்தலில் சோகண்டி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புராஜ் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நீதி கேட்டு அவரது மனைவி டிஜிபியை நாடி உள்ளார்.

ஊராட்சித் தலைவர் மர்மமரணம்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே உள்ளது சோகண்டி கிராமம். இக்கிராமத்தில் அன்புராஜ் என்பவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்டு சோகண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆனார் அன்புராஜ். இந்நிலையில் ஊராட்சி மன்றத்தில் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மர்மக் கும்பல் ஊராட்சி மன்றத் தலைவர் அன்புராஜை வெட்டி படுகொலை செய்து விட்டு சென்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அன்புராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என தேடி வந்தனர்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார்
இந்நிலையில் அன்புராஜின் மனைவி உமாமகேஸ்வரி சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். சாதிவெறி காரணமாக கணவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்து விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை முன்வரவில்லை என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உமா மகேஸ்வரி,

அன்புராஜ் மனைவி பேட்டி
"நான் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் அன்புராஜ் கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றார். பின்னர் ஊராட்சி மன்றத்தில் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியின்போது எனது கணவரை எல்லப்பன் என்பவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கடந்த நவம்பர் 18ம் தேதி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை
சாதிவெறிப் பிடித்து கொலை செய்த அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கொலை வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தன்னுடைய கணவர் மரணம் தொடர்பான வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர். கணவர் அன்புராஜ் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். கணவரை இழந்த நான் தற்போது இரண்டு குழந்தைகளுடன் வாழ வழியின்றி தவித்து வருகிறேன். இதுமட்டுமின்றி கணவர் கொலை செய்த குற்றவாளிகளிடமிருந்து தங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன்." என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications