’மறவர்’ பரம்பரை ஜெ.வாரிசு ஓபிஎஸ்.. 3 காரணம் சொல்றேன்! மா.செ. மீட்டிங்கில் கிளாஸ் எடுத்த பண்ருட்டி!
சென்னை : தொண்டர்கள்தான் தனது அரசியல் வாரிசு என்றார் எம்ஜிஆர் , எனவே தொண்டர்கள்தான் தலைமையை அங்கீகரிப்பார்கள் எனவும், ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு பன்னீர் செல்வம்தான் என அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அந்தக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிகளை வகித்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இரு தரப்பினரும் எலியும் பூனையுமாய் மோதிக்கொண்டிருக்கும் நிலையில் தொண்டர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தற்போது இரு அணிகளுமே கட்சிக்கு உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் அது நிலுவையில் இருக்கிறது.
தேர்தல் ஆணையம் வைத்த 'திடீர்’ ட்விஸ்ட்! எடப்பாடி கையில் அதிமுக? எல்லாம் ஓகே.. ஆஹா! கதை முடிஞ்சுதா?
ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிரடியாக அறிவித்தார் ஓபிஎஸ். இதனையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் ஜெயலலிதாவை நிரந்தர பொது செயலாளராக அறிவிப்பது போட்டி பொதுக்குழு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
பண்ருட்டி ராமச்சந்திரன்
ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு பன்னீர் செல்வம்தான் என அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர்,"3 காரணத்தால் பன்னீர் செல்வத்தை ஆதரிக்கிறேன். ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு பன்னீர் செல்வம்தான் , தான் செல்ல முடியாத இடங்களுக்கு , தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு , டெல்லி போன்ற இடங்களுக்கும் பன்னீர்செல்வத்தைத்தான் அனுப்புவார்.
துணிவு
அரசியல்வதிக்கு நம்பகத்தன்மை அவசியம். பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நம்பியது போல் மக்கள் நம்பலாம். இயக்கத்தை வழிநடத்த ஒருவருக்கு அடக்கம் பணிவு துணிவு இருக்க வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும்.. ' பணியுமாம் என்றும் பெருமை... என்கிறார் வள்ளுவர். பன்னீர்செல்வத்திடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை.
அரசியல் வாரிசு
எம்ஜிஆருக்கு எதிராக திமுகவில் பொதுக்குழு நடந்தபோது , திரைத்துறையில் இருக்கும் நிலையில் எம்ஜிஆர் முகத்தில் திராவகங்களை வீசி விடுவார்கள் என்று நாங்கள் கூறியதால் எம்ஜிஅர் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை. என்ன இருந்தாலும் மறவர் பரம்பரை ஓ.பன்னீர் செல்வம் . ஏழைகளுக்கான கட்சி இது. அன்றாட கூலி வேலை செய்பவர்கள்தான் தங்களை அதிமுக என்று சொல்லுவர். தொண்டர்கள்தான் தனது அரசியல் வாரிசு என்றார் எம்ஜிஆர் , எனவே தொண்டர்கள்தான் தலைமையை அங்கீகரிப்பார்கள்" என்றார். இதனை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.