"காய்ச்சல் மருந்துகள்.." ஏர்போர்ட் டெஸ்டில் எஸ்கேப் ஆக பயணிகளின் பலே திட்டம்.. திணறும் அதிகாரிகள்
சென்னை: கொரோனா தொற்றை கண்டறிய விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனையில் பாதிக்கும் மேல் பயனில்லாமல் போவதாகத் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பயணிகள் விமான நிலையங்களில் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகக் காய்ச்சல் மருந்தை உட்கொள்வது அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களைப் போன்றவர்களின் அலட்சியத்தால்தான் சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதாகக் கூறும் அவர்கள், சாதாரண நடைமுறையில் இருந்து தப்பிப்பதாக நினைத்துவிட்டு, பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் எனவும் கூறினர்.
சீனாவில் பரவும் கொரோனா உயிரை குடிப்பவை அல்ல..
தமிழகத்தில் உச்சக்கட்ட 'அலர்ட்'
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்திருப்பது உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா பரவிவிடுமா? மறுபடியும் ஊரடங்கை அறிவித்து விடுவார்களா? என நினைத்து மக்கள் பயந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், மாநிலங்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
விமான நிலையங்களில் தீவிர சோதனை
இதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படுகிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படுகிறது. அதே சமயத்தில், மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு உடல் வெப்பத்தை சோதிக்கும் சோதனை மட்டுமே நடத்தப்படுகிறது. இதில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்துவது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
தப்பிக்கும் பயணிகள்
இந்நிலையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இந்த காய்ச்சல் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் பெரும்பாலான பயணிகளுக்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதில்லை. இதனால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனிடையே, இது தொடர்பாக ஆய்வு செய்ததில், காய்ச்சல் பாதிப்பு கொண்ட பயணிகள் இந்த நடைமுறையில் இருந்து தப்புவதற்காக மருந்துகளை உட்கொள்வது தெரியவந்துள்ளது.
எச்சரிக்கும் சுகாதாரத் துறையினர்
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், "கொரோனா தொற்றை கண்டறிய விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனையில் பாதிக்கும் மேல் பயனில்லாமல் போகின்றன. அவர்கள் காய்ச்சலைக் குறைக்க மருந்துகளை அதிக டோஸ் எடுத்துக்கொள்வதால் விமான நிலையங்களில் அவர்களுக்கு உடல் வெப்பநிலையை சரியாகக் கண்டறிய முடியவில்லை. இதுபோன்ற நபர்களால்தான் சமூகத்தில் கொரோனா பரவல் ஏற்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மருந்துகள் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால், அதுகுறித்து நேர்மையாக அவர்கள் விமான நிலையங்களில் தெரிவிக்க வேண்டும்" என்றனர்.