பாமகவில் தான் அதிகம்.. பிரசாந்த் கிஷோரே சொல்லிட்டாரே! பொதுக்குழுவில் உற்சாகமான அன்புமணி ராமதாஸ்!
சென்னை : அண்மையில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் உள்ள கட்சிகளில் எந்த கட்சியில் அதிக இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்று ஆய்வு எடுத்ததில், பாட்டாளி மக்கள் கட்சியில் தான் இளைஞர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அன்புமணி ராமதாஸ்
நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி,"2022 பாமக கடுமையாக உழைத்த ஆண்டு. வருகின்ற 2023 ஆம் ஆண்டு நமக்கு மிக மிக முக்கியமான ஆண்டு. 2023 இல் தேர்தல் கிடையாது. ஆனால், தேர்தல் பணிகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதனால் தான் மிக முக்கியமான ஆண்டாக 2023ஐ நாம் கருதுகின்றோம். அதற்கேற்ப தீர்மானங்கள் எல்லாம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டில் நாம் செய்யக்கூடிய செயல் திட்டங்கள் அனைத்தையும் மருத்துவர் அய்யா அவர்கள் திட்டமிட்டு கொடுப்பார். அந்த செயல்திட்டங்களை எல்லாம் நாம் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பிரசாந்த் கிஷோர்
காரணம் நமக்கு இருக்கின்ற செயல் தலைவர்கள் நீங்கள் தான். உங்களைப் போன்ற செயல் தலைவர்கள் வேறு எந்த கட்சியிலும் கிடையாது. உங்களை பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று தேர்தல் ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், அதன் பிறகு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் ஸ்டாலின் போன்ற முதலமைச்சர்களை எல்லாம் வெற்றி பெற உதவினார். அண்மையில் அவர் தமிழகத்தில் உள்ள கட்சிகளில் எந்த கட்சியில் அதிக இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்று ஆய்வு எடுத்ததில், பாட்டாளி மக்கள் கட்சியில் தான் இளைஞர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

பாமக
இது உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. நம் கட்சியில் உள்ள இளைஞர்களை போன்று எந்தக் கட்சிகளிலும் கிடையாது. தற்போதைய அரசியல் சூழ்நிலையும், களமும் நமக்கு ஏற்றாற் போல் உள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை பார்த்தால் கலைந்து, பிரிந்து, உடைந்து, தேய்ந்து இருக்கின்ற சூழல். ஒரே ஒரு கட்சி மட்டும் தான் வேகமாக, வீரமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அது நம் பாட்டாளி மக்கள் கட்சி தான்.

விளம்பர அரசியல்
சில அரசியல் கட்சிகள் விளம்பர அரசியல் செய்கின்றார்கள். சில கட்சிகளில் இருந்து சத்தம் மட்டுமே வருகிறது. உள்ளே ஒன்றும் கிடையாது. அது எந்த கட்சி என்று உங்களுக்கு நன்றாக தெரியும். தினம் அவர்களை பற்றி செய்தி வரவேண்டும். அவர் என்ன பேசுவார் என்று அவருக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் தெரியாது. ஆனால் சத்தம் வரும். நாம் அப்படி கிடையாது. நமக்கு தெரிந்ததெல்லாம் நிதானம், பொறுமை, நாகரீகம், வளர்ச்சிக்கான அரசியல். வளர்ச்சியை நோக்கி நாம் செல்வோம். நமக்கான அங்கீகாரம் நமக்கு வந்து கொண்டிருக்கிறது. உறுதியாக வரும் என்று நம்பிக்கை வையுங்கள்.

முன்னேற்றம்
அதிமுக நான்காக உடைந்து உள்ளது. அது அவர்களுடைய பிரச்சனை. திமுக அரசு மீது மக்களின் விமர்சனங்களை பார்த்தால், பயங்கரமாக இருக்கிறது. அடுத்தது யார் இருக்கிறார்கள் என்றால் நாம் தான் இருக்கிறோம். மற்ற கட்சிகளிடம் சத்தம் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் நமக்கு நல்ல இளைஞர்கள் இருக்கிறார்கள். நம்முடைய உழைப்பு இருக்கிறது. நம்முடைய செயல் திட்டங்கள் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் நமக்கு மருத்துவர் அய்யா இருக்கிறார். நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

கோஷ்டி
நமது கட்சியில் கோஷ்டி இருக்கக் கூடாது. புது நிர்வாகிகள் நியமனம் செய்யும்போது பழைய நிர்வாகிகளை ஒதுக்கி, ஓரங்கட்டி, பெயரை போடாமல், கூப்பிடாமல் இருக்கிறார்கள். இது அனைவருக்குமான கட்சி. பழைய நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களையும் அழையுங்கள், கட்சியின் முன்னோடிகளையும் அழையுங்கள். அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நம்முடைய நோக்கம் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி. அதற்கு ஏற்ப நம்முடைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும்" என பேசினார்.












Click it and Unblock the Notifications