எடப்பாடி வேட்பாளருக்குதான் பாஜக சப்போர்ட் பண்ணும்.. காரணம் என்ன தெரியுமா? - சுரேஷ் கண்ணன்
எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடையே சமாதான முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கலாம் என இபிஎஸ் அணியைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் தெரிவித்தார்.
சென்னை: தனித்தனியாக பிரிந்து கிடக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக சமாதானப்படுத்த முயற்சி செய்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த சுரேஸ் கண்ணன் கூறியுள்ளார். பாஜக எப்போதும் வெற்றியைத்தான் நாடும் என்றும் விசுவாசத்தை அல்ல என்றும் சுரேஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து அறியப்படாமல் இருந்தது. இன்றைய தினம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, ஒரே நேரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சார களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ.பன்னீர் செல்வம் அணியும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிக்குழுவையும் நியமனம் செய்துள்ளது.
அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை இரு அணிகளுமே கேட்டால் சின்னம் கண்டிப்பாக முடங்கும் சூழ்நிலை உருவாகும். சின்னம் முடங்கினால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவருமே சுயேச்சை சின்னத்தில்தான் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.
பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்திற்காக என்பது தெளிவாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் டெல்லி சென்று இருந்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று காலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த பொன்னையன், பாஜக வடநாட்டிலே எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது? பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன? அந்த ஆட்சிகளை எல்லாம் எப்படி எல்லாம் பாஜக பிடித்தது? என்பது உங்களுக்கும் தெரியும்; மக்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம்.
உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக தனியாகத்தானே நின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறதா? என்ற கேள்விக்கே பொருள் இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்ற காரணத்தால் பாஜகவும் எங்களோடு இருக்கலாம் அல்லவா? எங்களை விரும்பலாம் அல்லவா? எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா? காத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.
அதே நேரத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த சுரேஷ் கண்ணன், பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்தையும் சந்தித்து இருக்கின்றனர். சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். நீங்கள் களமிறங்கினால் இரட்டை இலை முடங்க வாய்ப்பு உள்ளது எனவே வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என ஓ.பன்னீர் செல்வத்தை கேட்டுக்கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்த முயற்சி எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. ஓ.பன்னீர் செல்வம் விசுவாசமானவர்தான். அவர் களத்தில் வெற்றி பெறமுடியாது. எனவே பாஜக வெற்றியைத்தான் எப்போதும் நாடும் விசுவாசத்தை அல்ல என்றும் சுரேஷ் கண்ணன் கூறியுள்ளார். தேர்தல் களத்தில் வெற்றியைத்தான் கணக்கிடுவார்கள். விசுவாசத்தையும் நட்பையும் மட்டுமே பாஜக கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இன்று அல்லது நாளைக்குள் ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்றும் சுரேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications