பெரியார் எங்கள் வழிகாட்டி! அவரை நான் இழிவாகப் பேசியதற்கான ஆதாரம் இருக்கா? திருப்பிக் கேட்ட சீமான்!
சென்னை : பெரியாரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம் எனவும், இதுவரை பெரியாரை நான் இழிவாகப் பேசியதற்கான சான்று ஏதேனும் உள்ளதா?. திராவிடக் கோட்பாட்டைக் கொண்டவர்களும் பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசி, அதனை உண்மையாகப் பார்க்கிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அன்று ஆரியர்கள், எங்கள் வரலாற்றை திரித்தார்கள். எங்கள் இறையைத் தன்வயப்படுத்தினார்கள். எங்களின் சிவனை ருத்திரனாக்கினார்கள், கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். இன்றைக்கு எங்கள் வள்ளுவனுக்கு காவி போர்த்தி ஆரிய மயமாக்கப் பார்க்கிறார்கள்.
அதேபோன்று, திராவிடக் கோட்பாட்டைக் கொண்டவர்களும் பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசி, அதனை உண்மையாகப் பார்க்கிறார்கள். இதுவரை ஐயா பெரியார் அவர்களை நான் இழிவாகப் பேசியதற்கான சான்று ஏதேனும் உள்ளதா?
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் எதிரொலித்த பெரியார்.. டெல்லியில் இருந்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி
நாம் தமிழர் சீமான்
ஆனாலும் திராவிடர்கள், நாம் தமிழர் கட்சி ஐயா பெரியாருக்கு எதிரானவர்கள் என்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். நான் மேடைகளில் 15 ஆண்டுகளாக ஐயா பெரியாரின் கோட்பாடுகளைப் பேசியுள்ளேன். என்னை நேரடியாக எதிர்கொள்ள துணிவில்லாது. அன்று நான் பேசிய ஐயா பெரியாரின் கடவுள் மறுப்புக் கருத்துகளைக் கொண்ட காணொலிகளை வெட்டி ஒட்டி, அந்தந்த மத வழிபாட்டுத் தளங்களில் எனக்கெதிராகப் பரப்புரை செய்தார்கள். அது போன்ற ஒன்று தான் நாங்கள் பெரியாரை எதிர்ப்பவர்கள் என்கிற இந்த குற்றச்சாட்டு.
பெரியார்
பலமுறை கூறியதை மீண்டும் ஒருமுறை இன்று தெளிவுபடுத்துகிறேன். நாங்கள், உலகில் எங்கெல்லாம் மானுடச் சமூகம் தாழ்ந்து, வீழ்ந்து, அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ, அந்த மானுடச் சமூகத்தின் உரிமைக்கு, விடுதலைக்குப் போராடியவர்கள், பாட்டாகப் பாடியவர்கள், உயிர் கொடுத்தவர்கள், புரட்சி செய்தவர்கள் எல்லோருமே எங்களுடைய வழிகாட்டிகள் தான். ஏனென்றால், நாங்களும் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள். நாங்கள், மாமேதை மார்க்ஸை எங்கள் அறிவு ஆசானாக, பெருமைக்குரிய வழிகாட்டியாக ஏற்போம்.
எங்கள் வழிகாட்டி
ஆனால், இந்த நிலத்தில் எங்களுடைய தாத்தா சிங்காரவேலரையும், ஜீவானந்தத்தையும், நல்லகண்ணுவையும் தான் தலைவராக ஏற்போம். அதேபோன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை எங்களின் அறிவு ஆசானாக, எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஏற்கிறோம். ஆனால், அவரைப் போன்றே இந்த நிலத்தில் போராடிய எங்களுடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனையும், அயோத்திதாசப் பண்டிதரையும் தான் எங்கள் தலைவராக ஏற்போம். அந்த வரிசையில் ஐயா பெரியார் அவர்களை எங்கள் வழிகாட்டியாக ஏற்கின்றோம்.
கோட்பாடு
அதற்குக் காரணம் எங்களின் கோட்பாடு தான். அது, 'தகப்பன் என்பவன் எங்களைப் பெற்றவனாகத் தான் இருக்க முடியும், தலைவன் என்பவன் எங்கள் இரத்தவனாகத் தான் இருக்க முடியும்', 'என் மொழிப் புரியாதவன் எங்கள் இறைவனாக இருக்க முடியாது, எங்கள் வலி உணராதவன் எங்களுக்குத் தலைவனாக இருக்க முடியாது' என்பது தான். எம்மின வரலாறு தெரியாதவன் எங்களுக்கு வழிகாட்ட முடியாது. இது தான் எங்களின் நிலைப்பாடு. அதை ஏற்பவர் எங்களோடு பயணிக்கட்டும், எதிர்ப்பவர் எதிரே நின்று எதிர்க்கட்டும்.
விமர்சனங்கள்
எங்களைப் பெரியாருக்கு எதிரானவர்களாகக் கட்டமைக்கப் பாடுபடுபவர்கள், பெரியாரின் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல செய்தது என்ன? பெரியாரைப் பற்றி பேசுபவர்கள், பெரியார் பேசியதைப் பேசுவார்களா? சமூகநீதி என்று பேசுபவர்கள், ஐயா பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடுகளைச் செயல்படுத்துவார்களா? "ஒருவன் தனக்கான உரிமையைத் தன் வகுப்பின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ப போராடிப் பெறவில்லை என்றால் அவன் மானமிழந்தவனாவான்" என்று பேசியுள்ளார் ஐயா பெரியார். அவர் கூறியதற்கேற்ப குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி உண்மையான இடப்பங்கீட்டைக் கொடுக்க இவர்கள் ஏன் தயங்குகிறார்கள்? அதைச் செய்ய மாட்டார்கள். அது போன்ற ஒன்று தான் எங்கள் மீது சுமத்தப்படும் இந்த விமர்சனங்கள் எல்லாம்" என்றார்.