"பெரியாருக்கு காவி" 4 ட்வீட் போட்டு சாட்டையால் அடித்த ராமதாஸ்.. ஈனத்தனம் என ஜெயக்குமாரும் பாய்ச்சல்
தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன
சென்னை: தந்தை பெரியார் சிலைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் காட்டமான அறிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
ஏதாவது பிரச்சினை என்றால் இப்போதெல்லாம் பெரியார் சிலையை அவமானப்படுத்த ஆரம்பித்து விட்டனர். யார் இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் பெரியார் சிலைகளை அவமானப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் கோவையில் சுந்தராபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது சில கயவர்கள் காவிச் சாயத்தை ஊற்றியுள்ளனர். இது பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் சிலை அவமரியாதை... திருட்டுத்தனமான சதி... துடித்துப் போனேன்...வைகோ!!
இந்த நிலையில் பெரியாருக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த அவமரியாதையை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக கண்டித்துள்ளார். பெரியாருக்கு ஏதாவது ஒன்று என்றால் அதிமுக தரப்பிலிருந்து முதலில் வரும் கோபக் குரல் ஜெயக்குமாருடையதுதான். அந்த வகையில் கோவை சம்பவத்தையும் அவர் காட்டமாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில் . பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனத்தனமான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தத் தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.
இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் காட்டமாக நான்கு டிவீட்டுகளைப் போட்டுள்ளார். ஒரு டிவீட்டில், " கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டாக்டர் கூறியுள்ளார்.
அடுத்த டிவீட்டில், "தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கோபம் காட்டியுள்ளார்.
3வது டிவீட்டில், "கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று ஆவேசம் காட்டியுள்ளார்.
கடைசியாக நான்காவது டிவீட்டில், "கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும் என்று உச்சம் காட்டியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் யாரை சுட்டிக் காட்டி கோபம் காட்டியுள்ளார் என்பதை விளக்கிச் சொல்லத் தேவையில்லை.. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படியே அவர் போட்டுள்ளார் என்பது முக்கியமானது.