'சென்னையில் சமாதிகளை கட்டுவதை விட.. ராட்சத வடிகால்களை அமையுங்கள்'.. பிரேமலதா விஜயகாந்த் சொல்கிறார்!
சென்னை: சமாதிகளை கட்டுவதை விட, ராட்சத வடிகால்களை அமைத்து சென்னையின் வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கனமழை, வெள்ளத்தால் ஒட்டுமொத்த சென்னையும் தத்தளித்து வருகிறது.
சென்னை தரமணி திருவள்ளுவர் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார். அங்கு மழை நீரால் சூழ்ந்துள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.

5,000 ரூபாய் வழங்க வேண்டும்
இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- இரண்டு நாட்கள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ளது. நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருக்கும் மழை காலங்கள் மிகவும் கடினமாக இருப்பதாகவும், அதற்கு ஒரு தீர்வு வேண்டுமென மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். நான் ஏற்கனவே கூறியது போல், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் போதாது, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.

ராட்சத வடிகால் வசதி
டெல்டா பகுதி விவசாயிகளை தமிழக அரசு காக்க வேண்டும். தற்போதைய மழை இயற்கை பேரிடராக இருந்தாலும், இதில் வருடந்தோறும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ராட்சத வடிகால் வசதிகளை அமைத்து, ஹாங்காங் போல் சென்னையை மாற்ற வேண்டும். சமாதிகள், மேம்பாலங்கள், நினைவிடங்கள் கட்டுவதை விடுத்து அடுத்த மழை காலத்திற்குள் நிரந்தர தீர்வினை காண வேண்டும்.

அரசு வேகமாக செயல்பட வேண்டும்
ஒரு அரசியல் கட்சியாக பொதுமக்களுக்கு நாங்கள் உணவு அளிக்கலாம், ஆளும் கட்சியும் அதையே செய்ய கூடாது. இதை நான் குறையாக கூறவில்லை, ஆனால் இந்நேரத்தில் அரசு வேகமாக செயல்பட வேண்டும். பல இடங்களில் மின்சாரம் கிடைக்க்கவில்லை, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்சிகள் மாறவில்லை
நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை தி.மு.க, அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. தற்போதைய முதல்வராக உள்ள ஸ்டாலின், முன்பு சென்னையின் மேயராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். ஆனாலும், ஆட்சிகள தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை.காட்சிகளும் மாற வேண்டும், சிங்கப்பூரை போல் சென்னையை மாற்ற வேண்டும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications