சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50% இட ஒதுக்கீடு.. மருத்துவர்கள் வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு,சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் டாக்டர் பி. சம்பத்குமார் என்பவர்,தொடர்ந்துள்ள வழக்கில்,
அரசு மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக மருத்துவர்களுக்கு, வழங்கினால் தான் தமிழக மக்களுக்கு அவர்கள் சேவை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை அரசு சுட்டிக்காட்டியுள்ளதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவால்,நடப்பு கல்வியாண்டில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார் ..இட ஒதுக்கீடு கொடுக்காவிட்டால் மற்ற மாநில மருத்துவர்கள், படித்துவிட்டு வெளி மாநிலத்துக்கு சென்று விடுவார்கள்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு,சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு
வழங்க உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜி சங்கரன் ஆஜராகி அரசாணையின்படி நடப்பு கல்வியாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அரசாணையை அமல்படுத்துவீர்களா இல்லையா என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தசரா விடுமுறைக்கு பிறகு வருகிற 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனிடையே இந்தியாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு குறித்த அறிக்கையை கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு வெளியிட்டது. இந்த தேர்விற்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுவதாக ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. அதாவது, 60 சதவீத கேள்விகள் குறிப்பிட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு சார்ந்ததாகவும், 40 சதவீத கேள்விகள் பொது மருத்துவம் சார்ந்ததாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது. கடைசி நேரத்தில் 100 சதவீத கேள்விகளும் பொது மருத்துவம் சார்ந்ததாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மருத்துவர்கள் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அதில், திடீரென நவம்பர் மாத தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பின் நோக்கம் சிதைந்துவிடும். மேலும் தேர்விற்கு தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
வழக்கை தொடர்ந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், "மருத்துவத் தொழிலும் கல்வியும் வியாபாரமாகிவிட்டன. இப்போது, மருத்துவக் கல்வியின் ஒழுங்குமுறையும் அந்த வழியில் போய்விட்டது. இது தேசத்தின் துயரம்" என தெரிவித்ததோடு, இந்த ஆண்டிற்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வில் பழைய பாடத்திட்டத்தையே பயன்படுத்த 24 மணிநேரத்தில் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டது.
இதனையடுத்து நேற்று மத்திய அரசு, இந்த ஆண்டிற்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் எனவும், பாடத்திட்ட மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் முதுகலை மருத்துவர்கள் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications