மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மகாபலிபுரம் வருகை.. எடப்பாடி-ஓபிஎஸ் தீவிர ஆலோசனை
சென்னை: மாமல்லபுரம் வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு, அதிமுக சார்பில், அளிக்க வேண்டிய வரவேற்பு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ளது. நட்சத்திர ஹோட்டலில் வைத்து இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மகாபலிபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், சிற்பங்கள் உள்ளிட்டவற்றை, இரு தலைவர்களும் பார்வையிட உள்ளனர்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியாக உள்ள அதிமுக சார்பில், பிரதமர் மோடிக்கும், சீன அதிபருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை முதல் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மூன்று மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். இதே கூட்டத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை இடைத் தேர்தல் வியூகம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.