"கடவுளின் அவதாரம்".. மோடியின் தியான நிகழ்ச்சியை அனுமதிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தை நாடும் காங்கிரஸ்
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்யும் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை இன்று நாட போவதாக அறிவித்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் முடிந்த கையோடு, நாளை கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி.. நாளை 30ம் தேதி முதல் ஜுன் 1 வரை, பிரதமர் மோடி கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள போகிறார்.

தியானம்: ஆனால், பிரதமர் மோடி இத்தகைய தியானம் மேற்கொள்வது தேர்தல் விதிமீறல் என்கிறது தமிழக காங்கிரஸ்.. எனவே, இந்த தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்து வருகிறது.. எனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும், நீதிமன்றத்தை இன்று நாடி, புகார் தரப்போவதாக அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
"மே 30 முதல் ஜூன் 1 வரை நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.
வாக்குப்பதிவு: வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.
அத்துடன் தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தையும் செல்வப்பெருந்தகை டேக் செய்திருக்கிறார். இதையடுத்து, இன்றைய தினம் தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் சார்பில் கடிதம் கொடுக்க உள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடவுள் அவதாரம்: முன்னதாக, செல்வப்பெருந்தகை வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், தன்னை கடவுளின் அவதாரம் என்றும், மறு பிறவி என்றும் பிதற்ற ஆரம்பித்து விட்டார் பிரதமர் மோடி.. 'தாய் தன்னை பெற்றெடுக்கவில்லை என்று கூறும் ஒருவர் உயிரியல் வழிமுறைப்படி தான் பிறக்கவில்லை என்று உறுதியாக நம்பும் ஒருவர், இந்திய நாட்டின் பிரதமராக இருப்பதற்கு மனரீதியாக தகுதியுடைவர் தானா? என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications