ஜூலை 26ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி.. திட்டத்தில் மாற்றம்.. என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளி வந்துள்ளது. மாலத்தீவில் இருந்து ஜூலை 26ஆம் தேதி இரவு தூத்துக்குடி வரும் மோடி, பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டிப் பேசவுள்ளார். இதன்பின் ஜூலை 27ஆம் தேதி அரியலூர் மாவட்டம் வரும் மோடி, ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், முக்கியக் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ஏற்கனவே பாஜக தரப்பில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் பாஜக தேசிய தலைவர்கள் தொடர்ச்சியாகத் தமிழகத்திற்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 23 முதல் 27 வரை 5 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது.
இதில் கடைசி நாளான ஜூலை 27ஆம் தேதி நடக்கவுள்ள திருவாசகம் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியானது. அதன்பின் ஜூலை 28ஆம் தேதி பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இந்த நிலையில் ஜூலை 26ஆம் தேதி இரவே பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலமாக ஜூலை 26ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வரவுள்ளார். இதன்பின் தூத்துக்குடியில் இரவு 8.30 மணிக்கு நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசவுள்ளார். இதன்பின் இரவு 9.40 மணிக்கு தூத்துக்குடியில் விமானம் மூலமாகத் திருச்சி செல்கிறார்.
தொடர்ந்து ஜூலை 27ஆம் தேதி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் செல்லவுள்ளார். இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்பின் திருச்சி விமான நிலையம் திரும்பி பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதன் மூலமாக ஜூலை 28ல் பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை பிரதமர் மோடியை சந்திக்க அதிமுகவில் யாருக்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications