கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், நேரு உள்விளையாட்டு அரங்கமும் ஆக்கிரமிப்பு தான்! இடிப்பீங்களா? அன்புமணி ஆவேசம்
சென்னை : சென்னை மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகளும் அரசும், ஓஎம்ஆர் சாலையில் உள்ள அலுவலகங்களை இடித்து விடுவார்களா? கோயம்பேடு பேருந்து நிலையத்தை இடிப்பார்களா? என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் கோவிந்தசாமி நகரில் குடியிருந்து வரும் ஏழை மக்களின் குடிசைகளை இடித்து, காலி செய்த அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தி , மறைந்த கண்ணையாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நெவர்... 1.5 லட்சம் தமிழர்களை கொன்றவர்கள்! ராஜபக்ஷேக்களுக்கு இந்தியா தஞ்சமளிக்கக் கூடாது - அன்புமணி
அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," தனிநபர் ஒருவருக்காக ஏழ்மையான மக்களின் குடிசைகளை இடிப்பது சரி தானா? ஒருதலைபட்சமாக அதிகாரிகள் செயல்படலாமா? பக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வழி இல்லை என்பதற்காக இங்கே காலம் காலமாக வசித்து வரும் மக்களை காலி செய்வது என்பது சரியானது தானா? மேலும் தனிநபர் ஒருவர் தொடுத்த வழக்கினை வைத்துக் கொண்டு அதிகாரிகள் இவ்வாறு செயல்படுவது சரியா?
அரசின் ஆக்கிரமிப்பு
இங்கே வசிக்கும் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டும், அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கும் தமிழக அரசு நிர்வாகம், அவர்களின் இருப்பிடத்தை தனிநபர் வழக்குக்கு எதிராக காப்பாற்றி கொடுத்திருக்க வேண்டாமா? தனிநபர் தொடுத்த வழக்கில் காலி செய்ய வேண்டும் என தீர்ப்பு வந்து இருப்பின் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து இருக்க வேண்டாமா? நீராதார புறம்போக்கில், நீர்பிடிப்பு, நீர்நிலை பகுதிகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடமானது நீர்ப்பிடிப்பு பகுதியே இல்லை.
நேரு உள்விளையாட்டு அரங்கம்
நீர் பிடிப்பு பகுதிகளை இடிக்க வேண்டுமென்றால், முதலில் MRTS தான் இடிக்க வேண்டும். பாக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து தான் கட்டியிருக்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்தை நீர்நிலைகளில் தான் கட்டியிருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நீர்நிலைகளில் தான் கட்டியிருக்கிறார்கள் ஆசிய விளையாட்டு கிராமத்தை நீர்நிலைகளில் தான் கட்டியிருக்கிறார்கள். பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறார்களே அவர்களின் வீடுகளை இடித்து விட முடியுமா? சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள அனைத்து அலுவலகங்களும் நீர்பிடிப்பு பகுதியான பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து தானே கட்டப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின்
அத்தனை அலுவலகங்களையும் இடித்துவிடுவார்களா? ஏழ்மை மக்கள் என்றால் மட்டும் ஏன் இவ்வளவு கடுமை காட்டப்பட்டு அதிகாரிகள் இவ்வளவு தீவிரமாக இடித்து தள்ளி இருக்கிறார்கள். அவர்கள் எங்கே செல்வார்கள்? முதலமைச்சர் இதில் தலையிட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு, இவர்களுக்கான மறுவாழ்வு நிலையங்களை இங்கேயே அமைத்து, அவர்களை மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். அதேபோல ஏழைகளும், பணக்காரர்களும் அருகருகே வசிக்க வேண்டும் என்பதுதான் ஐநாவின் கொள்கை. மறுவாழ்வு நிலையங்களை அவர்கள் இருந்த இடத்திலேயே அமைக்க வேண்டும் என்பதுதான் ஐநாவின் கொள்கையும் கூட, அதனை தமிழக அரசு பின்பற்றும் என எதிர்பார்க்கிறோம்" என கூறியுள்ளார்.