Exclusive: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து... என்ன செய்யப் போகிறது பாமக? தமிழக அரசு என்ன சொல்கிறது?
சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்தறியவும் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறியவும் அமைச்சர் சிவசங்கரை நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது அவர் நம்மிடம் கூறிய தகவல் பின்வருமாறு;
''வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து தொடர்பான தீர்ப்பின் முழு விவரம் இன்னும் தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. இன்றோ நாளையோ தீர்ப்பு விவரம் முழுமையாக கைக்கு வந்தவுடன், அது குறித்து சட்டவல்லுநர்கள் மற்றும் முதலமைச்சருடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து இந்த ஆலோசனைக்கு பிறகே முடிவெடுக்கப்படும். நான் தற்போது பள்ளிகளில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று கொண்டிருக்கிறேன். இது தொடர்பான மேற்படி தகவலை பிறகு பேசுகிறேன்.'' என அமைச்சர் சிவசங்கர் ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்தார்.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து! நீதிபதியிடம் கடைசி நேரத்தில் மன்றாடிய பாமக பாலு..! நடந்தது என்ன?
பாமக எம்.எல்.ஏ.
இதனிடையே வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து குறித்து பாமக மாநில துணைச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அருள் ஒன் இந்தியா தமிழிடம் பேசிய போது கூறியதாவது, ''வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பை அறிந்து மனம் உடைந்து போனேன். உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசை குறை கூற ஒன்றுமில்லை, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நிச்சயம் வன்னியர் சமுதாய மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது'' என பாமக மாநில துணைச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அருள் தெரிவித்துள்ளார்.
குரு கனலரசன்
இதேபோல் மாவீரன் மஞ்சள் படைத் தலைவரும் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் மகனுமான கனலரசன் இது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்த கருத்து பின்வருமாறு, ''வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து என்பது நீதிமன்றத்தில் தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் மன்றத்தில் ரத்துச்செய்யப்படவில்லை. இதனால் தமிழக அரசு எவ்வித காலதாமதமும் இல்லாமல் அறிவார்ந்த சட்ட வல்லுநர்கள் மூலம் மேல் முறையீடு செய்து 10.5% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
சி.வி.சண்முகம்
''அரசு தன் பணியை சட்ட நடவடிக்கை மூலம் மேற்கொள்ளும். இதனால் நீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் கருத்துக் கூற ஒன்றுமில்லை.'' என முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
விஷ்ணுபிரசாத் எம்.பி.
''வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து விவகாரத்தை அரசு பார்த்துக்கொள்ளும்.தமிழக அரசு அப்பீல் செய்யும் என எதிர்பார்க்கிறேன், நீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் கருத்துக் கூறினால் முறையாக இருக்காது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத் ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்துள்ளார்.