மே - 5.. மீண்டும் மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு விழா! பாமக ராமதாஸ் அறிவிப்பு? உற்சாக பாட்டாளிகள்!
சென்னை : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினரை உற்சாகப்படுத்த வேண்டுமென பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்த நிலையில், மே 5ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு விழா நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா என்னும் பெயரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக பிரச்சனை இருந்தது.
இதை அடுத்து சில ஆண்டுகள் சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெறவில்லை. தொடர்ந்து வன்னியர் சங்க நிர்வாகிகளும் பாமகவினரும் அந்த சந்திப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
முதலுக்கே மோசமாயிடும்..தமாகாவை தள்ளிவிடும் இபிஎஸ்? எப்படியும் அதுதான் நடக்கும்! ’பிளான் பி’ இதுதானா?
சித்திரை முழு நிலவு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் பாமகவினரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்த ஆணையிட வேண்டும் என கோரிக்கையை விடுத்தார். இதை அடுத்து அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டு இருந்த நிர்வாகிகள் உற்சாகமாக விசில் அடித்து வரவேற்றனர். கைதட்டல் அடங்குவதற்கும் சில நிமிடங்கள் பிடித்தது.
அன்புமணி ராமதாஸ்
இதை அடுத்து தொண்டர்கள் மிக ஆர்வமாக இருக்கிறார்கள் எனவே சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்த வேண்டும் அதற்கு மருத்துவர் ஐயா ராமதாஸ் உத்தரவிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார் அன்புமணி. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வருகின்ற சித்திரை முழு நிலவு நிகழ்ச்சியை நடத்த அன்புமணி ராமதாஸ் தீவிரம் காட்டி வருவதாகவும், அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மே 5ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு விழா நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரக்காணம் கலவரம்
மாமல்லபுரத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவின்போது, மரக்காணத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரம், விழாவில் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோரின் ச்சு, இதனால் அவர்கள் கைதானது, அதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் பாமகவினர் 134 பேர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டது போன்ற தொடர் நிகழ்வுகளால் சித்திரை முழு நிலவு விழா பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2013ஆம் ஆண்டு விழா நடத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்தது.
அனுமதி மறுப்பு
2014 ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தை விதிகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாவட்ட காவல்துறை, அப்போதும் விழா நடத்த அனுமதி அளிக்க வில்லை. அதன்பிறகு அவ்விழா நடக்கவில்லை. மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டதோடு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் அது மட்டும் இல்லாமல் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து பல இடங்களில் போராட்டம் வெடித்தது.
பாமகவினர் விடுதலை
ராமதாஸ் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து வழக்குகளும் பதியப்பட்டது. தொடர்ந்து பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர் அதற்குப் பிறகு சித்திரை முழு நிலவு விழா கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் மரக்காணம் கலவரம் தொடர்பாக வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட 2வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சுதா வழக்கை விசாரித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்த தீர்ப்பில், அரசு தரப்பில் போதுமான சாட்சியங்கள் அளிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு
இதனால் சட்டரீதியாக பாமகவினர் மீது குற்றமில்லை எனவும், இதனை வைத்தே மே மாதம் முழு நிலவு விழாவுக்கு அனுமதி பெற பாமக தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ராமதாஸ் இது தொடர்பாக அறிக்கையோ அறிவிப்போ விடாத நிலையில், பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் அனுமதி அளித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்கின்றனர் பாமக மூத்த நிர்வாகிகள்.