நீட் மோசடிகளின் கூடாரம்... ரத்து செய்வதே சிறந்தது... மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவுரை..!
சென்னை: நீட் மோசடிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் இந்த தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
ஆள்மாறாட்ட மோசடிகள் நீட் தேர்வு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகளின் மீதான மாணவர்களின் நம்பிக்கையை முற்றாக தகர்த்து விட்டது எனக் கூறியிருக்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பேரதிர்ச்சி
மராட்டிய மாநிலத்தை மையமாக வைத்து தில்லியிலும், ஜார்கண்டிலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. மருத்துவ மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வே மோசடிகளின் கூடாரமாக மாறியிருப்பது மாணவர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.
புலனாய்வு
2021-ஆம் கல்வியாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடிகளை செய்ததாகக் கூறி, மராட்டிய மாநிலம் நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மற்றும் கல்வி வழிகாட்டுதல் நிறுவனம் மீது நடுவண் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
ரூ.50 லட்சம்
ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் மாணவர்களுக்கு மாற்றாக வேறு ஆட்களை நீட் எழுத வைத்து, நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி தில்லியிலும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் 5 மாணவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்தது என்பது தான் அந்த நிறுவனம் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும். இதற்காக பல வழிகளில், பல்வேறு நிலைகளில் போலிச் சான்றிதழ், போலி அடையாள அட்டை உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ளன.
என்ன காரணம்?
இந்தியாவில் 2010-ஆம் ஆண்டில் நீட் கொண்டு வரப்பட்ட போது அதற்காக கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது, மருத்துவக் கல்வியில் வணிக நோக்கத்தை ஒழிப்பது ஆகியவை தான். நீட் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மோசடி தடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நீட் தேர்விலேயே தொடர் மோசடிகள் நடைபெற்று வருவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
வினாத்தாள் கசிவு
இத்தகைய மோசடிகள் நீட் தேர்வு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகளின் மீதான மாணவர்களின் நம்பிக்கையை முற்றாக தகர்த்து விட்டன. நீட் தேர்வில் முறைகேடுகளும், மோசடிகளும் நடப்பது இது முதல்முறையல்ல. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வினாத்தாள்கள் ஜெய்ப்பூரில் ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் நீட் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே கசிந்துள்ளன. அதேபோல், ஆள் மாறாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கண்டுபிடிக்கவில்லை
தமிழ்நாட்டில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் நீட் தேர்வில் 10 மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் படித்த அவர்கள் பெயரில் பிகார் உள்ளிட்ட வட மாநில மையங்களில் வேறு ஆட்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதற்காக ஒவ்வொருவர் சார்பிலும் ரூ.25 லட்சம் கையூட்டு தரப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதப்பட்டு, அதன் முடிவாகி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வரை இந்த மோசடி கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆள் மாறாட்டம்
தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட மோசடியில் உண்மையான மாணவர்களுக்கு பதிலியாக தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட பிறகும் கூட அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது கூட தில்லி, ராஞ்சியில் ஆள் மாறாட்டம் செய்தவர்கள் யார்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
ரத்து செய்க
இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. எனவே, நடப்பாண்டு முதலே நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்; அதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.