அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி! திமுக அரசின் திட்டத்துக்கு பாமக முதல் ஆளாக வரவேற்பு!
சென்னை: அரசுத் தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திமுக அரசு செய்த சாதனைகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை வரவேற்று இன்னும் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களே ரியாக்ஷனை வெளிப்படுத்தாத நிலையில் பாமக முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்துள்ளது.
அதே சமயம், காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
பொங்கல்..உப்புமா..கேசரி..அரசுப் பள்ளிகளில் 1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி.. மெனு
1545 தொடக்கப் பள்ளிகள்
''தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவுப்பசி தேடி அரசு பள்ளிகளுக்கு வரும் ஏழைக் குடும்ப மாணவர்களின் வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான இந்த திட்டம் வரவேற்கத்தக்கது ஆகும். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ''
காலை உணவுடன் பால்
''பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் தவறாமல் இடம் பெற்ற இந்த அறிவிப்பு நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறைந்த அளவிலான பள்ளிகளில் தான் தொடங்கப்படுகிறது. இது அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தனது பதிவில் கூறியிருக்கிறார்.
முக்கிய சாதனை
கடந்த ஒராண்டு கால திமுக ஆட்சியில், அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படுவது மிக முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. திட்டத்தை வரவேற்று இன்னும் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களே ரியாக்ஷனை வெளிப்படுத்தாத நிலையில் பாமக முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்துள்ளது.
எல்லா நாட்களும் உப்புமா
அரசுத் தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டியாக எல்லா நாட்களும் உப்புமாவும், கிச்சடியும் மட்டுமே வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற டிஃபன் வகைகள் அரசு வெளியிட்டுள்ள சிற்றுண்டி மெனுவில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.