நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. 50 வாக்குறுதிகள் உடன் பாமக தேரத்ல் அறிக்கை வெளியீடு!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாமக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 40 வாக்குறுதிகளைக் கொண்டு தனியாகத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரும் வரும் சனிக்கிழமை (பிப். 19) தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இருந்தே அதே கூட்டணி திமுகவில் தொடர்கிறது.
அதேநேரம் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக இந்த முறை தனித்துக் களமிறங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகத் தனியாகத் தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது. நம் தெரு, நம் நகரம், நம் எதிர்காலம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் தெருக்கள், குப்பை எரிப்பு, வீட்டுவசதி, மின்சார வாகனங்கள் உட்பட 50 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
சென்னைக்கு தனியாகவும், மற்ற பகுதிகளுக்குத் தனியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாமக வெளியிட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையைப் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டரில், "நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகத்தை விட உள்ளாட்சி ஜனநாயகம் வலிமையானது. இந்திய ஜனநாயகம் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்றால், உள்ளாட்சியில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பது பாமக நிலைப்பாடு. நகர்ப்புற உள்ளாட்சியில் மாற்றம் படைப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications