துணிவா? வாரிசா? தமிழ் மக்களின் டிஎன்ஏவில் சினிமா இருக்கு.. அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து!
கோவை: அஜித் குமார் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் டிஎன்ஏ-வில் சினிமா கலந்திருப்பதாக கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், சினிமாவில் இல்லாததால் எங்களை போன்றவர்கள் அரசியலில் முன்னேற கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான அஜித் குமார் மற்றும் விஜய் ஆகியோர் நடித்துள்ள துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக துணிவு மற்றும் வாரிசு குறித்த பேச்சுகள் சமூக வலைதளங்களில் உச்சத்தில் இருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு முதல் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் உச்சத்திற்கு சென்றது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இரு படங்களும் வெளியான திரையரங்குகள் முன் ஒரு திருவிழாவையே நடத்தினர்.
“அஜித் மேல கேஸ் போடுங்க..” உயிர் பறித்த ரசிகரின் 'துணிவு’! விஜய்போல் திருந்துங்க -பால் முகவர் சங்கம்
அன்புமணி ராமதாஸ்
தற்போது இரு படங்களும் அந்தந்த ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ள நிலையில், அரசியல்வாதிகளையும் துணிவு மற்றும் வாரிசு ஃபீவர் தொற்றிக் கொண்டுள்ளது. பசுமை தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் கோவையில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
நொய்யல் ஆறு
இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 40 ஆண்டுகளுக்கு முன் நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீரை நாம் குடிநீராக பயன்படுத்தலாம். நொய்யல் ஆற்றுக்கு கி.மு. முதலே சரித்திரம் இருக்கிறது. ஏராளமான தொல்லியல் ஆதாரங்கள் நொய்யல் ஆற்றுக்கு உள்ளது. மூவேந்தர்களும் சேர்ந்து நொய்யல் ஆற்றை பாதுகாத்துள்ளனர். நீர் மேலாண்மை திட்டங்களை மூவேந்தர்களும் சேர்ந்து நொய்யல் ஆற்றுக்கு செய்துள்ளனர். இதனை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
துணிவா? வாரிசா?
சினிமா மூலமாகவும் இளம் தலைமுறையினருக்கு எடுத்து கூறலாம். பொன்னியன் செல்வம் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது. இப்போது இளைஞர்கள் மத்தியில் துணிவா? வாரிசா? என்ற வாதம் அதிகம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் டிஎன்ஏ-வில் சினிமா ஊறி இருக்கிறது. அதனாலேயே எங்களை போன்றோர் அரசியலில் முன்னேறுவதற்கு கடினமாக இருக்கிறது.
பாமக நோக்கம் என்ன?
எங்களின் நோக்கம் தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பது தான். அதற்காக ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால், வேகமாக தமிழ்நாட்டை முன்னேற்ற முடியும். நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. நொய்யல் நன்றாக இருந்தால் தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும். ஒரு காலத்தில் நொய்யல் ஆற்றில் 4.5 லட்சம் ஏக்கர் பாசனம் செய்தார்கள். இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.