குட்டி நாயை தாக்கிய நபர்.. வெளியான சிசிடிவி காட்சி.. துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீஸ்!
சென்னை மணலியில் நாயை தரையில் அடித்து துன்புறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை மணலியில் நாயை தரையில் அடித்து துன்புறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மணலியில் ஆசையாக காலை சுற்றி வந்த குட்டி நாயை நபர் ஒருவர் கையில் தூக்கி தரையில் வீசிய சம்பவம் வீடியோவாக வெளியானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த சிசிடிவி கேமராவின் பதிவை வைத்து சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் ப்ளூ கிராஸ் அமைப்பிடம் புகார் அளித்தார். இதனையடுத்து ப்ளூ கிராசின் வழக்கறிஞர் கஸ்தூரி மணலி காவல் நிலையத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

இதனையடுத்து நாயை துன்புறுத்திய நிகழ்வு சிசிடிவி கேமரா பதிவை வைத்து விசாரணையில் ஈடுபட்ட மணலி போலீசார் சேலைவாயில் பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் பாலமுருகன் என்பவர்தான் அந்த நாயை தாக்கியது என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரித்ததில் பாலமுருகன் தன் கடைக்கு அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கு இருந்த குட்டி நாயை அழைத்து ஆசையாக தூக்கிய போது இதனை கண்ட அதன் தாய் நாய் கடிப்பதற்காக ஓடிவந்ததால் பயந்து இப்படி செய்ததாக கூறியுள்ளார். நாய் மீது ஏற்பட்ட பயத்தால் கையில் இருந்த குட்டியை அதன் மீது தூக்கி அடித்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தன்னை பாதுகாத்து கொள்ள நாயை தூக்கி அடித்ததை ஒப்பு கொண்டதை அடுத்து மணலி போலீசார் பாலமுருகனை நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர் . சாலையில் சக மனிதரை ஒருவர் தாக்கும் போது அதனை வேடிக்கை பார்த்துவிட்டு செல்லும் மனிதர்கள் மத்தியில் , குட்டி நாயை தூக்கி வீசியதை கண்டவுடன் அப்பகுதியில் உள்ள அனைத்து நாய்களும் பாலமுருகனை சுற்றிவளைத்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது காண்போரை நெகிழ வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications