பிஎஃப்ஐ அலுவலக ரெய்டு..சென்னையில் என்ஐஏ அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் நேற்று என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருந்த நிலையில் கோவையில் பாஜக அலுலகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக என்ஐஏ அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. நேற்று கைது செய்த பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் 8 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனைக்குப் பின்னர், அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ அமைப்புக்கு 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. கடந்த ஜூலை மாதம் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு பிரதமர் மோடி சென்றபோது, அவரைக் கொல்லத் திட்டமிட்டதாக 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும், பிஎஃப்ஐ அமைப்புக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

என்ஐஏ சோதனை
இதையடுத்து, பாட்னாவில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும், கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு பாட்னாவில் ஆயுதப் பயிற்சி அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தெலங்கானாவில் சோதனை
இதேபோல, தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாக அப்துல் காதர் உள்ளிட்டோர் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கையும் என்ஐஏ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஆந்திரா, தெலங்கானாவில் 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பிஎஃப்ஐ அமைப்புக்கு நிதியுதவி
நடப்பாண்டு தொடக்கத்தில் கேரளாவின் மூணாறைச் சேர்ந்த பிஎஃப்ஐ நிர்வாகிகள் அப்துல் ரசாக், அஷ்ரப் ஆகியோர் ரூ.22 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. விசாரணையில், வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து பிஎஃப்ஐ அமைப்புக்கு நிதியுதவி கிடைப்பது தெரியவந்தது. இதேபோல, எஸ்டிபிஐ நிர்வாகிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

300 இடங்களில் என்ஐஏ சோதனை
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து 15 மாநிலங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். முக்கிய நகரங்களில் உள்ள பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சுமார் 200 செல்போன்கள், 100 லேப்டாப் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இதுதவிர, வங்கிக் கணக்குகள், ஆவணங்களும் பரிசோதிக்கப்பட்டன.

போராட்டம்
இந்த சோதனையின்போது, தமிழகத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, முகமது யூசுப், இஸ்மாயில் உள்ளிட்ட 45 பேரைக் கைது செய்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளா, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் ஆவணங்கள் பறிமுதல்
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிஎஃப்ஐ தலைமை அலுவலகத்தில் நடத்திய சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பிஎஃப்ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரான கோவை கரும்புக்கடை சவுகார் நகரைச் சேர்ந்த ஏ.எஸ்.இஸ்மாயில் வீட்டுக்குச் சென்ற என்ஐஏ அதிகாரிகள், அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

பல ஊர்களில் சோதனை
பணப் பரிமாற்றம், சந்தேகத்துக்குரிய தகவல்கள் பரிமாற்றம், ஆவணங்கள் தொடர்பாக வீடு முழுவதும் சோதனை செய்தனர். பின்னர், விசாரணைக்காக இஸ்மாயிலை கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். பிஎஃப்ஐ அமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் ஜாகீர் உசேனின் வீடு காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள ஜாகீர் உசேன் நகரில் உள்ளது. அங்கும் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், அவரது மடிக்கணினி, செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், விசாரணைக்காக ஜாகீர் உசேனை அதிகாரிகள் அழைத்து சென்றனர். திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள அறிவகம் பெண்கள் மதராஸா கல்லூரியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

புதுச்சேரியில் கைது
காரைக்கால் தோமாஸ் அருள் வீதியில் உள்ள, புதுச்சேரி மாநில எஸ்டிபிஐ மாநிலத் துணைத் தலைவர் முகமது பிலால், காமராஜர் சாலையில் உள்ள ஹசன் குத்தூஸ், திருமலைராயன்பட்டினம் பகுதி யில் உள்ள எஸ்டிபிஐ நிர்வாகி பக்ருதீன் ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர்களது வீடுகளில் இருந்து பென் ட்ரைவ், லேப்டாப் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

என்ஐஏ அலுவலகத்திற்கு பாதுகாப்பு
இதனிடையே சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் நேற்று என்ஐஏ சோதனை நடத்தியிருந்த நிலையில் கோவையில் பாஜக அலுலகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக என்ஐஏ அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications