தபால் துறை ஹேப்பி நியூஸ்.. இந்திய அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டி.. முதல் பரிசு ரூ.50000
சென்னை: கடிதம் எழுதுவதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கமாகும்.. டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவே இதுபோன்ற போட்டியை தபால்துறை நடத்தி வருகிறது. அந்தவகையில், இந்த வருடத்துக்கான போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.
இந்தியாவில் தபால் துறையின் சேவைகள் அபரிமிதமானது.. அஞ்சல் துறை கொண்டுவந்துள்ள திட்டங்கள் ஒவ்வொன்றும் பொதுமக்களுக்கு மிகுந்த பலனை தந்து வருகின்றன..

அதேபோல ஓய்வூதியதாரர்களுக்காகவே தபால்துறை எண்ணற்ற சலுகைகளையும், அறிவிப்புகளையும் வழங்கி வருவதுடன், அஞ்சல்துறை பென்ஷன்தாரர்களின் குறைகளை தீர்ப்பதற்காகவே முகாம்களும் நடத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.. கடந்தமாதம்கூட, சென்னையில் அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
தபால் துறை சபாஷ்
மற்றொருபுறம் கடிதம் எழுதும் போட்டியையும் அஞ்சல்துறை நடத்தி வருகிறது.. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, கடிதம் எழுதும் பழக்கமே மறைந்துவிட்டது.. கடிதம் எழுதுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது, எழுத்து பழக்கத்தை ஊக்குவிப்பது போன்றவற்றை தபால்துறை முன்னெடுத்து வருகிறது..
அந்தவகையில் இந்திய அஞ்சல் துறை தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டியை (DHAI AKHAR Letter) ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது.. இந்த வருடமும் கடிதம் எழுதும் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்பட உள்ள இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை அதிரடி
இந்நிலையில், தூத்துக்குடி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.
ரூல்ஸ் இதுதான்
போட்டிக்கான கடிதத்தை, "எனது முன்மாதிரிக்கு கடிதம்" "Letter to My Role Model" என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உள்நாட்டு கடித பிரிவில் (Inland Letter Card) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (Envelope) 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுத வேண்டும்.
"1.1.2025 அன்று 18 வயது நிறைவு பெற்றவர் / நிறைவு பெறாதவர்" என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். போட்டியில் பங்குபெறுவோரின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
முதல்பரிசு 50000
இந்த போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் இப்போட்டியில் பங்குபெற்று பயனடையலாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications