நிவர் வரும் போது.. வராது பவர்.. மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு..!
சென்னை: நிவர் புயல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது, புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும், இதனை மின்வெட்டு என நினைத்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் இருந்து சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும். இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை மறுநாள் மதியம் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் புயல் கடக்க வாய்ப்பு உள்ளதால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

117 கிமீ வேகத்தில் காற்று
இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசும். இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 89 முதல் 117 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தங்கமணி ஆலோசனை
இதனிடையே வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து மண்டல தலைமை பொறியாளர்களுடனும், அதிகாரிகளுடனும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மின்சார வாரிய தலைவர் பங்கஜ் குமார் பன்சால், இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

புயலின் போது மின்சாரம் கட்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற 25ம் தேதி பிற்பகலில் நிவர் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாதால், இதனை எதிர்கொள்ள மின்துறை சார்பில் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும், இதனை மின்வெட்டு என நினைக்க வேண்டாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. காரைக்கால் முதல் மாமல்லபுரம் வரை நான்கு மாவட்டங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படுள்ளது. மரங்களை உடனடியாக அகற்றவும் தேவையான பணியாளர்கள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.

புகார் அளிக்க தொலைப்பேசி எண்
கடலோர மாவட்டங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது. கஜா புயலை விட அதிக பாதிப்பு இருக்காது, அப்படி இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளது.
கடலூரில் புதை வழித்தடத்தில் மின்சார தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, வருங்காலங்களில் பணிகள் நிறைவுற்ற பிறகு பேரிடர் காலத்திலும் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் 24 மணி நேரமும் புகார்கள் தெரிவிக்க 1912 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications