அனைவருக்கும் அன்னம்... நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு உணவு... பிரசாந்த்கிஷோரின் புதிய முயற்சி
சென்னை: அனைவருக்கும் அன்னம் என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை உட்பட இந்தியா முழுவதும் 25 முக்கிய நகரங்களில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.
பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் பணி ஏப்ரல் 14-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் உணவு கிடைக்காமல் தவிக்கும் இரவல் பெறுவோருக்கும், சாலையோரவாசிகளுக்கும் உதவும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் அன்னம்
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்நிலையில் லட்சக்கணக்கான தினக்கூலி பெறுவோர், குடிபெயர்ந்த தொழிலாளிகள், இரவல் பெறுவோர், என பல தரப்பினரும் அன்றாடம் உணவுக்கு திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர்களுக்கு உணவு அளிப்பதற்காக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது ஐ பேக் நிறுவனம் சார்பாக ''சப்கி ராசொய்'' (அனைவருக்கும் உணவு) என்ற திட்டத்தை நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளார்.
25 முக்கிய நகரங்கள்
சென்னை, கொல்கத்தா, டெல்லி, உட்பட நாடு முழுவதும் 25 முக்கிய நகரங்களில் மட்டும் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது ஐ பேக் நிறுவனம். அடுத்த 10 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 15-ம் தேதி வரை அனைவருக்கும் அன்னம் என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படும் என ஐ பேக் நிறுவனம் அறிவித்துள்ளது. பசியால் வாடி ஒருவர் உயிரிழக்கக்கூடாது என்பதே இந்த திட்டத்தை தொடங்கியதற்கான முக்கிய நோக்கம் என்று ஐ பேக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம்
சென்னை உட்பட இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து ஐ பேக் நிறுவனம் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது. சென்னையை பொறுத்தவரை ஸ்ரீபெரும் புதூரில் உள்ள சென்ட்ரல் கிச்சன் எனப்படும் ஒரே இடத்தில் உணவு தயாரிக்கப்படுகிறது. பின்னர் அதனை பிரபல உணவு விநியோகிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் பேக்கேஜிங் செய்து மாநகரம் முழுவதும் கொண்டு சென்று விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
சமூக விலகல்
அனைவருக்கும் அன்னம் திட்டத்தில் 1000 பேர் பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொருவரும் சமூக விலகலை கடைபிடித்து அரசு கூறிய நெறிமுறைகளை தவறாது பின்பற்றுவர் எனவும் ஐ பேக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கடந்த 5 நாட்களாக சோதனை அடிப்படையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும், அதற்கு ஏழை எளியோர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இதனை முழுவீச்சில் செயல்படுத்தியுள்ளதாகவும் ஐ பேக் தெரிவித்துள்ளது.