நகர்ப்புற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி?.. கட்சியில் முக்கிய பதவி குறித்து க்ளூ கொடுத்த பிரேமலதா!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அது போல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிப்பதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் சினிமாவில் நடிக்கவில்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டே நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டு 30 சதவீத வாக்குகளை பெற்றது. விஜயகாந்த் முதல்முறையாக எம்எல்ஏவாக பொறுப்பேற்றார்.

அதிமுக
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபையில் திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். எனினும் அடுத்தடுத்த தேர்தல்களில் விஜயகாந்திற்கு சறுக்கல்களே வந்தன. இந்த நிலையில் விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கட்சி விவகாரங்களை அவரது மனைவி பிரேமலதாவே கவனித்து வருகிறார்.

தொகுதி பங்கீடு
கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் பிரேமலதாவின் தலையீடே இருப்பதாக தொண்டர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உடல்நிலை பாதிப்பு
தேமுதிகவின் தலைவராக உள்ள விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. இதனால் கட்சியின் பொருளாளராக உள்ள பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர். மேலும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி பிரேமலதாவை நியமிக்க வேண்டும் என்றும் சில மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள்.

மீண்டும் சினிமாவிலா
இந்த நிலையில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிப்பதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் சினிமாவில் நடிக்கவில்லை.விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன் , உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வாக இருக்கிறார். அவர் நடிப்பதாக வந்த தகவல் தவறானது. ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியில் தலைமைக் குழு மூலம் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். கட்சியில் செயல்தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனால் புதியதாக செயல்தலைவர் பதவி ஏற்படுத்துவது குறித்து பொதுக் குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார். எனவே கட்சியில் பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக செயல்தலைவர் பதவியே புதிதாக உருவாக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications