காந்தி ஜெயந்தி : ‘வன்முறை தவிர்த்து அமைதியைப் போற்றுவோம்’ - தலைவர்கள் வாழ்த்து!
சென்னை : நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது 'தேசத் தந்தை' மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை 'காந்தி ஜெயந்தி' ஆக கொண்டாடுகிறோம்.
நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாப்படுகிறது. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவரது தியாகங்களைப் போற்றி, அவர்தம் நல்ல நோக்கங்கள் நிறைவேறப் பாடுபடுவோம்.
தமிழக அரசின் சார்பில் மகாத்மா காந்தி 153வது பிறந்தநாள் விழா இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் நடக்கிறது.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட தலைவர்கள் காந்தி ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு.. பதவிப்பிரமாணம் செய்துவைத்த ஜனாதிபதி திரெளபதி முர்மு!
திரௌபதி முர்மு
மகாத்மா காந்தியின் 153-வது பிறந்ததினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. அவர் முன்னெடுத்த உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுக்கு ஆதரவு, தற்சார்பு கொள்கை ஆகியவை நாட்டு மகக்ளுக்கு உத்வேகம் அளித்தது. காந்தியடிகளை கௌரவப்படுத்தும் வகையில், தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு செயலொஅடுத்தி வருகிறது.
நமக்கு வழிகாட்டும்
உலகம் சந்திக்க உள்ள பல்வேறு சிக்கலான சவால்களுக்கு, காந்திஜியின் வாழ்க்கைப் பாதை கலங்கரை விளக்கமாக நமக்கு வழிகாட்டும். அவரது நேர்மை, அஹிம்சை பாதையைக் கடைபிடித்து நாட்டிற்கும் உலகின் முன்னேற்றத்திற்கும் பணியாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
துணை குடியரசுத் தலைவர்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், "தேசத் தந்தையின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவீன இந்தியாவின் எழுச்சியூட்டும் ஆளுமைகளுள் ஒருவரான மகாத்மா காந்தி, இதுபோன்ற சவாலான தருணங்களில் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வழிகாட்டியாகவும், நம்பிக்கையாகவும் தொடர்ந்து நீடிக்கிறார். அநீதிக்கு எதிரான அவரது சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை போராட்டம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோரை ஈர்த்துள்ளது. உண்மையின் மீதான காந்தி அவர்களின் நம்பிக்கையும், மனிதர்களிடம் நல்லுணர்வும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.
அமைதியான உலகிற்காக
ஒவ்வொரு தலைமுறையும் மகாத்மா காந்தியை தனக்குரிய வழியில் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். வறுமை முதல் பருவநிலை மாற்றம், போர்கள் வரை உலகம் இன்று சந்தித்து வரும் ஏராளமான அபாயங்களை மகாத்மா காந்தியின் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றி வெற்றிகரமாக தீர்க்க முடியும். எந்த ஒரு பிரச்சனைக்கும் போர் தீர்வாகாது என்ற பாபு அவர்களின் குரல், மனித சமூகத்தை வழிநடத்துகிறது. காந்தி ஜெயந்தியன்று, வன்முறை, தாக்குதல், தீவிரவாதம் மற்றும் ஏற்றத்தாழ்வின் அனைத்து வடிவங்களும் இல்லாத அமைதியான உலகிற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.