Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பக்கா ஸ்கெட்ச்! ‛ஒகே’ சொல்லும் பிரதமர் மோடி! நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டி? புதிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், இதற்காக 2 தொகுதிகளை குறிவைக்கப்பட்டு பரிசீலனை நடத்துவதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை இப்போதே அனைத்து கட்சிகளும் துவங்கிவிட்டன. மத்தியில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ள பாஜக வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

Prime Minister Narendra Modi considering contesting 2024 Lok Sabha election from Tamil Nadu constituency

அதேவேளையில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதன்படி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தல் களம் என்பது இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் ஆளும் திமுக தேர்தல் பணிகளை துவங்கிவிட்டது. அதேபோல் அதிமுக, பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் கட்சி தலைவர்கள் செயல்பட வேண்டும் என பேசினார்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜக, அதிமுக கூட்டணியில் உள்ளது. இதற்கிடையே தான் பாஜகவுக்கு 25 தொகுதிகளை அதிமுக விட்டு கொடுக்குமா? என்ற விவாதம் கிளம்பி ஒருபக்கம் ஓடி கொண்டிருக்கும் அதேவேளையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

உண்மையிலேயே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் உள்ள தொகுதியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக தான் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிறுவியதாக கூறப்படுகிறது. அதாவது ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவிடம் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட சோழ பாரம்பரிய செங்கோல் வழங்கப்பட்டது. இது மியூசியத்தில் இருந்த நிலையில் அதனை பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தில் நிறுவினர். இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து திருவாடுதுறை ஆதீனம் உள்பட பல ஆதீனங்கள் பங்கேற்றனர். இதன் பின்னணியிலும் அரசியல் கணக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Prime Minister Narendra Modi considering contesting 2024 Lok Sabha election from Tamil Nadu constituency

அதாவது பாஜகவை பொறுத்தமட்டில் வடமாநிலங்களில் மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சியாக உள்ளது. ஆனால் தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை. கர்நாடகாவிலும் கூட சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதுதவிர தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக தனித்து போட்டியிட்டு வாகை சூட இயலாத நிலை தான் இருக்கிறது. மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்தால் அது வடமாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் தென்மாநிலங்களில் கடந்த முறையை விட கூடுதல் இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால் பாஜக நினைப்பது போல் தென்மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றுவது என்பது எளிமையான காரியம் இல்லை. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மாநில கட்சிகள் மிகவும் பலமாக உள்ளன. கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் வலுவாக உள்ளன. இத்தகைய கட்டமைப்புகளை உடைத்து பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறுவது என்பது பெரும் சவாலான விஷயமாக தான் பார்க்கப்படுகிறது.

இருப்பினும் கூட சவாலை சமாளித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆபரேஷன் சவுத் திட்டத்தை பாஜக கையில் எடுத்து வியூகம் வகுத்து வரும் நிலையில் அதற்கு வலுசேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தென்மாநிலத்தில் இருந்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதுவும் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் மோடி களமிறங்குவது தொடர்பாக தீவிர பரிசீலனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களை வெற்றி பெறலாம் என பாஜக மேலிடம் கணக்கீட்டுள்ளது. அதாவது பிரதமர் மோடி தற்போது எம்பியாக உள்ள உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ள நிலையில் அவர் 2வது தொகுதியாக தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாட்டில் 2 தொகுதிகளும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழ் டெலிகிராப் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு பிரதமர் மோடி கடந்த 2019 ல் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வாரணாசியில் பிரதமர் மோடி களமிறங்க வாய்ப்புள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக 2வது தொகுதியாக தமிழ்நாட்டில் போட்டியிட பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி இந்துக்களின் புனிதத் தலமான ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் அதுபற்றிய பரிசீலனை தீவிரமாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசிக்கும் (வாரணாசி தொகுதியில் உள்ளது), ராமேஸ்வரத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இரண்டும் சிவபெருமானின் இருப்பிடமாக உள்ளது. அதோடு வடக்கே காசி இருப்பது போல் தெற்கே ராமேஸ்வரம் விளங்கி வருகிறது.

அதோடு ராமேஸ்வரத்தில் ராமர் பாலம் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த பாலம் ராமருக்காக இலங்கை நோக்கி கட்டமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. இதனால் பிரதமர் மோடி ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியலாம் என கூறப்படுகிறது.

மேலும் ராமநாதபுரம் தவிர கன்னியாகுமரி தொகுதியும் பிரதமர் மோடியின் பரிசீலனையில் உள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி என்பது இந்தியாவின் தெற்கு எல்லையாக உள்ளது. இங்கு பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. கடந்த 2014 தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில் 2019 ல் அவர் தோல்வியடைந்தார். இதனால் இந்த தொகுதியில் பிரதமர் மோடியை களமிறக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது நடக்கும் பட்சத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டை ஒன்றிணைக்கும் பிரதமர் மோடியின் கனவு நனவாகலாம் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதுபற்றி பாஜகவை சேர்ந்த தலைவர்கள் கூறுகையில், ‛‛பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர் தமிழனாக மாறுவார். வாரணாசி எம்பியாக இருக்கும் அவர் காசிவாலா, உபிவாலா என பெயர் பெற்றுள்ளார். மேலும் பிரதமர் மோடி தமிழ்நாடு மீது தனி அன்பை வைத்துள்ளார்.

இதற்கு உதாரணமாக பல விஷயங்களை கூறலாம். கடந்த 2019 ல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்தார். அதன்பிறகு சமீபத்தில் பிரதமர் மோடி தனது தொகுதியில் உள்ள காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொடர்பை புதுப்பிக்கும் வகையில் ‛தமிழ் காசி சங்கமம்' நிகழ்ச்சியை நடத்தினார்'' என்றனர்.

மேலும் இதற்கு முன்பு கடந்த 2010ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த மோடி, குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான கலாச்சார தொடர்புகளை கொண்டாடும் வகையில் மதுரையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். இதனால் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு ஒன்றும் புதிதாக இருக்காது. இதுபற்றி தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் கூறுகையில், ‛‛தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து தற்போது பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது எங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவது மட்டுமின்றி மாநிலத்தில் கூடுதலாக சில இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெல்வார்கள்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் கூட பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் அல்லது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+