இரட்டை இலைக்கு ஆபத்து? டெல்லி காட்டிய சிக்னல்.. 7 பேரோடு போன எடப்பாடி.. ‘திடீர் மீட்’ பின்னணி இதானா?
சென்னை : பாஜகவை கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி சீண்டி வந்த நிலையில், டெல்லியில் இருந்து வந்த சிக்னல்களை முன்வைத்தே, தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி அன் கோ சென்று சந்தித்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தனக்கு நெருக்கமான 7 முக்கிய நிர்வாகிகளோடு சென்று சந்தித்தது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் கிளப்பப்பட்டு வருகின்றன.
திமுக ஆட்சியில் நிலவும் ஊழல், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடு தொடர்பாக 10 பக்க புகாரை ஆளுநரிடம் அளித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினாலும், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ் சந்திப்பு பற்றி சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநராக இருக்கும்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் கையைப் பிடித்து இணைத்து வைத்து, ஓபிஎஸ்ஸை துணை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போதைய ஆளுநரையும் உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவே ஈபிஎஸ் அணியினர் சந்தித்திருக்கலாம் என்ற யூகங்கள் பரவி வருகின்றன.

ஆளுநரை சந்தித்த எடப்பாடி அன் கோ
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து திமுக அரசு மீதான 10 பக்க புகார் மனுவை நேற்று அளித்தார். அவரோடு முன்னாள் அமைச்சர்கள் 7 பேரும் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக தெரிவித்தார். கமிஷன், கலெக்சன், கரெப்சன் தான் திராவிட மாடலாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார். இவர்களை தட்டிக்கேட்க சரியான ஆள் ஆளுநர் தான் என்பதால், ஆளுநரிடம் புகார் அளித்தோம் எனத் தெரிவித்தார்.

வேற பிளான்
ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்ததற்கான காரணமே வேறு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து, பாஜக ஓபிஎஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்பட்டு வரும் நிலையில், பாஜகவை சீண்டும் வகையில் நடந்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இது டெல்லியின் கவனத்திற்குச் சென்றதால், உடனே அங்கிருந்து பார்வை ஈபிஎஸ் நோக்கித் திரும்பியது என்கிறார்கள். கூட்டணியை விட்டு விலகும் திட்டம் தனக்கு இல்லை என ஈபிஎஸ் அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டாலும், பாஜக தலைமை ஈபிஎஸ்ஸுக்கு செக் வைக்க வேறு பிளான் போட்டிருக்கலாம் என்கிறார்கள்.

டெல்லி நெருக்கம் + ஆளுநர்
தமிழக ஆளுநர் ரவி, பாஜக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார், கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்தபோது கூட ஆளுநர் மாளிகையிலேயே தங்கினார். ஆளுநர் மாளிகையில், பாஜகவினரை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார். அந்தவகையில், பாஜக அரசின் தூதுவராகவே ஆளுநர் ரவி இங்கு செயல்பட்டு வருகிறார். அதனால், டெல்லி தலைமையே, ஆளுநரைச் சந்திக்குமாறு அறிவுறுத்தி இருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஓபிஎஸ் உடனான மோதல் தொடர்பாக முக்கிய விஷயங்கள் பகிரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அப்பவே அப்படி
ஏற்கனவே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு, நதிநீர் இணைப்பு பற்றி கோரிக்கை விடுத்தேன் எனக் கூறினார். ஜல் சக்தி துறை அமைச்சரிடம் பேச வேண்டியதை உள்துறை அமைச்சரிடம் பேச என்ன இருக்கிறது என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. அதிமுக விவகார ரீதியாகச் சந்தித்து விட்டு, பூசி மொழுகுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறினர். அதுபோலவே, தற்போது ஆளுநரைச் சந்தித்து விட்டு, உண்மையான காரணத்தைச் சொல்லாமல், திமுக மீதான புகாரை காரணமாகச் சொல்கிறார் எனக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இரட்டை இலை முடக்கத்தை தடுக்க?
ஓபிஎஸ் தொடர் சட்ட நடவடிக்கைகளால், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த முடியாதபடி செய்யப்போவதாக ஒரு தகவல் உலவுகிறது. டெல்லி மேலிடமும் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகச் செயல்பட்டு வருவதால், அதுபோன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, டெல்லியின் ஆதரவுக் கரத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக, சகாக்களோடு ஆளுநரை சந்தித்துப் பேசியிருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்களும், திமுகவினரும் கூறுகின்றனர்.

எடப்பாடி கருவி
ஏற்கனவே, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும், எடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளனர். அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், அதிமுகவை யார் கைப்பற்றுவது என்பது பற்றி அவர்களிடையே பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த யுத்தத்தில்தான் பெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சந்தித்துவிட்டு தற்போது ஆளுநரை சந்தித்து இருக்கிறார் ஈபிஎஸ் என்றும், தற்போது பாஜகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியிருக்கக்கூடிய நிலையில் அதை திசைதிருப்ப எடப்பாடி பழனிசாமி ஒரு கருவியாக மாறி கவர்னரை சந்தித்து நாடகத்தை அரங்கேற்றினாரா? என்றும் சந்தேகம் எழுப்பினார்.

2017 சம்பவம்
கடந்த 2017ல் ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமியை இணைத்து வைக்க அப்போதிருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒரு சமரச உடன்படிக்கையை ஏற்படுத்தியது போன்று இப்போது அதிமுகவில் இரு அணிகளுக்கும் இடையே நடக்கக்கூடிய உள்கட்சி போட்டா போட்டியில் தனக்கு சாதகமான ஒரு நிலையை உருவாக்குவதற்கு கவர்னரிடம் முறையிட்டாரா? என்ற சந்தேகமும் எழுகிறது என்றார் தங்கம் தென்னரசு.

தைரியம் இருக்கிறதா?
திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி, ஆளுனரைச் சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஊழல் நடக்கிறது, போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என புகார் அளித்துள்ளார். போதைபொருள் விற்பனையில் பாஜகவினர்தான் ஈடுபடுகின்றனர். தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து கேட்கட்டும், உட்கட்சிப் பிரச்சனை காரணமாகவே ஈபிஎஸ் ஆளுநரைச் சந்தித்திருக்கிறார் எனத் தெரிவித்தார்.

வீண் பழி
அதேபோல, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் எடப்பாடி - ஆளுநர் சந்திப்பு குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் உள்ள உட்கட்சி பூசலை தீர்க்க வேண்டியே ஆளுநரை சந்தித்தார். ஆனால் மக்கள் மத்தியில் திமுகவின் மீது வீண்பழி சுமத்துகிறார் என பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

மசோதா பற்றிக் கூட பேசலையே
கடந்த அதிமுக ஆட்சியில், அரசுக்கு நெருக்கடி கொடுத்து, துணைவேந்தர் நியமனத்தில் தலையிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக எதிர்க்கட்சியாக இருந்த திமுக போராட்டம் நடத்தியது. ஆனால், இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவினர், ஆளுநரை மாநில உரிமை உள்ளிட்ட எந்த விஷயத்திற்கும் கண்டிப்பதில்லை. நீட் உள்ளிட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநரிடம் அதுபற்றி பேசாமல் வந்துள்ளனர். ஆளுநரைச் சந்தித்தது தனது கட்சிப் பதவியை காப்பாற்றிக் கொள்ளத்தான் என திமுகவினர் விமர்சிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications