அரசு வசமிடமிருந்து இந்து கோயில் நிர்வாகத்தை மாற்றுவோம்.. பாஜக தேர்தல் அறிக்கை
சென்னை: மதசார்பற்ற அரசு இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி, இந்து கோயில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், இந்து சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து கோயில் நிர்வாகத்தை அரசிடம் இருந்து இந்து மத சான்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்பட பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்துமத இயக்கத்தைச் சேர்ந்த பலரும் அரசிடம் இந்து கோயில்களை மட்டும் நிர்வாகிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு.. பஞ்சமி நிலம் மீட்பு.. ப்ரீலைசென்ஸ் . பாஜக தேர்தல் அறிக்கை
இந்து கோயில்கள்
ஆனால் ஆளும் அதிமுகவும் சரி, எதிர்க்கட்சியான திமுகவும் சரி, இதை கண்டுகொள்ளவில்லை. இதற்கு முன்பும் கண்டுகொண்டதில்லை. கோயில்கள் நிர்வாகம் விஷயத்திலும் சரி, மத விவகாரங்களிலும் சரி ஒரே கொள்கையை பின்பற்றி வந்தனர். பிரபலமான இந்து கோயில்களை, இந்து சமய அறநிலையத்துறை மூலம் அரசு தான் நடத்தி வருகிறது. இதில் பல முறைகேடுகள் நடப்பதாக பாஜக பலமுறை குற்றம்சாட்டி வந்தது.
பாஜக வாக்குறுதி
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, அதிமுகவே சொல்லாத முக்கியமான சில விஷங்களை தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. குறிப்பாக இந்து கோயில்கள் நிர்வாகம், இந்துமத சான்றோர்களின் கையில் ஒப்படைப்பு, பூரண மதுவிலக்கு, ஆற்று மணல் அள்ள தடை போன்றவற்றை கூறலாம்.
நிர்வாகம் ஒப்படைப்பு
இதில் திமுக. அதிமுகவினர் நினைத்து கூட பார்க்காத விஷயம் என்றால் இந்து கோயில் நிர்வாக மாற்றம் தான், மதசார்பற்ற அரசு இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி, இந்து கோயில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், இந்து சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
பாஜக அறிக்கை
ஆனால் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள இந்து கோயில்கள் நிர்வாகம், இந்துமத சான்றோர்களின் கையில் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதியை அதிமுக ஏற்குமா என்பது பெரும் கேள்விதான். ஏனெனில் இதுபற்றி அந்த கட்சி எந்த இடத்திலும் சொல்லியது இல்லை. பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இந்த அறிவிப்பு இந்து மத ஆர்வலர்களை கவர உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலில் எந்த அளவிற்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும்.