தமிழகத்திற்கு கூடுதல் ஆக்ஸிஜன்களை உடனே வழங்குக.. முதல்வரான பின் ஸ்டாலின் பிரதமருக்கு முதல் கடிதம்
சென்னை: தமிழகத்திற்கு தேவையான கூடுதல் ஆக்ஸிஜன்களையும், ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல க்ரையோஜெனிக் கன்டெய்னர்களையும் உடனே வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின், முதல்வரான பின்னர் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவையை குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் முதல்வராக இன்று பதவியேற்ற எனக்கு தங்கள் வாழ்த்தியதற்கு நன்றி. தமிழகத்தின் முதல்வராக தங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். இன்று நான் முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே மாவட்ட ஆட்சி தலைவர்ளுடன் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி கருத்துக்களை பெற்றேன்.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க நடவடிக்கை அரசு போதிய எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை மிக மிக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு உடனடியாக கூடுதல் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும். தமிழகத்தில் தினசரி ஆக்ஸிஜன் தேவை 440 மெட்ரிக் டன் என்ற அளவில் உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த தேவை இன்னும் 400 மெட்ரிக் டன் ஆக அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக அடுத்த 2 வாரத்தில் 840 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு தற்போது 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே ஒதுக்கப்படுகிறது,
எனவே தமிழகத்திற்கு தேவையான கூடுதல் ஆக்ஸிஜன்களையும், ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல குறைந்தது 20 க்ரையோஜெனிக் கன்டெய்னர்களையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை நிறுத்த வேண்டும். தமிழகத்திற்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை உடனே அடுத்த நான்கு நாட்களுக்கு வழங்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தியாகும் 60 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனையும் உடனடியாக அடுத்த 2 நாட்களுக்கு வழங்க வேண்டும்" என்று முக ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். செங்கல்பட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் 13 பேர் இறந்த சம்பவத்தையும் கடிதத்தில் முக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.