மழையால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குக - ஓபிஎஸ் வலியுறுத்தல்
மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க உத்தர விட வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொட்டித்தீர்த்த கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. பல லட்சக்கானோர் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதி கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து நாட்களுக்குள் தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
ஏற்கனவே, ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளதால் 4 லட்சம் ரூபாய் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
ஏற்கனவே உயர்த்தி அறிவிக்கப்பட்டதை குறைத்து அறிவிப்பது இயற்கை நியதிக்கு முரணானது. அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, முதல்வர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, அண்மையில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க உத்தரவிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications